Friday, August 31, 2007

ரிலையன்ஸ் பிரஷ்-யை மூட முடியாது - இந்திய சட்டம் சொல்கிறதாம் ! அப்ப என்ன வெங்காய மக்களாட்சி !!

இன்று இந்தியாவில் 4 கோடி மக்கள் சிறு வணிகத்தில் ஈடுபட்டு உள்ளனர். மொத்தம் 20 கோடி மக்களின் வாழ்வாதாரமாக சில்லரை வணிகம் உள்ளது.

இதனை அழித்து மொத்த இந்திய சில்லரை வணிகத்தை ஒரு சில பெரிய பன்னாட்டு & தரகு முதலாளி நிறுவனங்கள் கைப்பற்ற இன்றைக்கு இந்த சில்லரை வணிகத்தில் நுழைந்து பல சங்கிலி தொடர் கடையினை திறந்து வருகின்றனர்.

இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள் ஆங்காங்கே சில தன்னிச்சையான போராட்டங்கள், அவனுடைய கடையினை சூறையாடுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில் நேற்று பேட்டியளித்த வேளான் துறை அமைச்சர் பவார் "ரிலையன்ஸ் கடைகளை மூட முடியாது" என்றும்; உத்திரப்பிரதேசத்திலும், கேரளாவிலும் ரிலையன்ஸுக்கு விதித்த தடை நிரந்தரமாக இருக்காது என்றும் கூறியுள்ளார்.

"இந்திய நாட்டின் சட்டங்கள் எதையும் மீறாத எந்த ஒரு அமைப்பையும் நிரந்தரமாக மூடுவதற்கு, தடை செய்வதற்கு எந்த மாநில அரசுக்கும் அதிகாரம் கிடையாது" என்று அவர் சொல்கிறார்.

சரத்பவாரின் வாயிலிருந்தே இந்த நாட்டின் சட்டங்கள் எல்லாம் பணமுதலைகளின் நலனுக்கானவை மட்டுமே என்பது அம்மணமாக வெளிப்பட்டு விட்டது!!
..
சமீபத்திய சி.என்.என் தொலைக்காட்சியில் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்ற எம்.பி க்களிடம் கேட்டபோது பெரும்பான்மை எம்.பி க்களுக்கு இந்த ஒப்ப்ந்தம் பற்றி ஒரு விவரமும் தெரியவில்லை.

ஆட்சியாளர்கள் மட்டுமல்ல, நாளுமன்றத்துக்கே அதிகாரம் இல்லை என்று நிரூபணமாகி விட்டது; 123 யை பற்றி விவாதிக்க நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று சபாநாயகர் அறிவித்துள்ளார்.

காரணம், இந்திய ராணுவ & வெளியுறவு ஒப்பந்தத்தை விவாதிக்க நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று 'இந்திய சட்டம்' வரையுறுக்கப்பட்டுள்ளது.

இந்த விஷயத்திலிருந்து தெரியவருவது என்ன? இந்திய அரசியல் சட்டம் இந்திய மக்களுக்கானது அல்ல.அது பன்னாட்டு கொள்ளையர்களுக்கும், தரகு முதலாளிகளுக்கும் ஆனது என்பதும் 'நாடாளுமன்றம்' அதிகாரம் ஏதுமற்ற வெற்று அரட்டைமடம் என்பதும் தான்.
..
இந்த உண்மை எல்லா அரசியல்வாதிகளுக்கும் தெரியும், இரண்டு வருஷமாக எதிர்க்காமல் இப்ப 123 யை எதிர்க்குறோம் என்று பம்மாத்து காட்டி கூட்டுகுழு என்று சமரசம் செய்துகொண்ட் போலிக் கம்யூனிடுகளுக்கும் தெரியும்.
..
அடிமை சாசனம் (123) பற்றி வாயே திறக்காமல் 'இந்தியா 2020' வல்லரசு ஆகிவிடும் என்று பொய் பேசிக் கொண்டு திரிந்த முன்னாள் 'அரசவை கோமாளி' அப்துல்கலாமுக்கும் தெரியும்.
Related:
..
..

Labels: , ,

Thursday, August 30, 2007

அபு கிரைப் : அமெரிக்கப் பயங்கரவாதத்தின் இரத்தச் சாட்சி !

Monday, August 27, 2007

123 ஒப்பந்தமும் போலி கம்யூனிஸ்டுகளின் நீலிக் கண்ணீரும் !

பிரணாப் முகர்ஜி போட்ட கள்ளத்தனமாக இராணுவ ஒப்பந்தம் 2005-இலேயே அம்பலமாகிவிட்டது. அமெரிக்காவின் ஆணைப்படிதான் ஈரானுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது என்பதும் அடுத்து அம்பலமானது. எனினும் காங்கிரஸ் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அப்போதெல்லாம் மார்க்சிஸ்டுகள் திரும்பப் பெறவில்லை. மாறாக, அமெரிக்க இராணுவமும் இந்திய இராணுவமும் மே.வங்களத்திலேயே கூட்டு போர் ஒத்திகை நடத்துவதற்கு போலீசு பாதுகாப்புக் கொடுத்தாரக்ள்.
..
"அணு ஆயுத ஒப்பந்தத்துக்கு எதிராகப் எதிராகப் பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்போவதாக" என்ற சென்ற ஆண்டு பூச்சாண்டி காட்டினார் பிரகாஷ் காரத். "அப்படி தீர்மானம் கொண்டு வந்தால் இந்த அரசே இருக்காது" என்று பிரணாப் முகர்ஜி மார்க்சிஸ்டுகளை மிரட்டினார். உடனே சரணடைந்தார்கள்.இன்றைக்கு சவடால் அடிக்கிறார்கள்.

"உலகமயமாக்கத்தை எதிர்க்கவில்லை, அது மனிதமுகத்துடன் இருக்கவேண்டும்", "சிறப்பு பொருளாதார மண்டலத்தை எதிர்க்கவில்லை, விவசாயிகளுக்கு போதுமான நட்ட ஈடு கொடுத்து நிலத்தைப் பறிமுதல் செய்ய வேண்டும்". "பொதுத்துறைகளைத் தனியார்மயமாக்குவதை எதிர்க்கவில்லை, தொழிலாளர்களின் வேலைக்கு உத்திரவாதம் தரவேண்டும்" - இதுதான் போலி கம்யூனிஸ்டுகளின் அரசியல். இப்போது , "அணுசக்தி ஒப்பந்தம் வேண்டாம் என்று சொல்லவில்லை, நாட்டின் இறையாண்மைக்கு பெரும் பாதிப்பு வந்துவிடக் கூடாது" என்று பசப்புகிறாரக்ள்.

"தனிப் பெரும்பான்மை இல்லாத ஒரு சிறுபான்மை அரசு துரோகத்தனமான ஒப்பந்தத்தைத் திருட்டுத்தனமாக இந்திய மக்கள் மேல் திணித்திருக்கிறது. இந்த அரசைக் கவிழ்ப்பதில் என்ன குற்றம்?" என்று நாடாளுமன்ற அரசியலின் வரம்புக்குட்பட்டு கேள்வி எழுப்பும் தைரியமும்கூட இவர்களுக்கு இல்லை.
..
"இந்த அரசு நிலைக்குமா என்பதை நாங்கள் ஏன் சொல்ல வேண்டும், அதை காங்கிரசு முடி செய்து கொள்ளட்டும்" என்று பேடித்தனமாக மழுப்புகிறார்கள்.
..
இந்த பசப்பல்களுக்கும், மழுப்பல்களுக்கும் காரணம் இருக்கிறது. "பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தரகு முதலாளிகளுக்கும் சலுகைகளை வாரி வழங்குவதன் மூலம் தான் நாட்டைத் தொழில்மயமாக்கி முன்னேற்ற முடியும்" என்ற கருத்தில் மன்மோகனுக்கும் மார்க்சிஸ்டுகளுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை.

அதனால்தான் சிங்கூரிலும் நந்திக்கிராமிலும் எத்தகைய அட்டூழியங்கள் நடந்தாலும் மார்க்சிஸ்டுகளுக்குக் கொள்கை பூர்வமாக ஆதரவுக் கரம் நீட்டுகிறார் மன்மோகன் சிங், " அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்குமாறு புத்ததேவைத் தொலைபேசியில் கூப்பிட்டு உரிமையோடு கோரிக்கை வைக்கிறார்.

கட்சித் தலைமை கூடி முடிவெடுப்பதற்கு முன்னதாகவே "காங்கிரசு அரசை கவிழ்க்க மாட்டோம்" என்று முந்திக் கொண்டு அறிக்கை விடுகிறார் ஜோதிபாசு.

அது மட்டுமல்லல் டாடா, அம்பானி போன்ற தரகு முதலாளிகள் முகம் சுளித்து வருத்தப்படும் படியான காரியம் எதையும் மார்க்சிஸ்டுகள் ஒருக்காலும் செய்ய மாட்டார்கள்.மேலும், அமெரிக்காவின் வால் மார்ட்டையும் கொலைகார யூனியன் கார்பைடையும் மேற்கு வங்கத்தில் தொழில் தொடங்க பாக்கு வைத்து அழைக்கும் மார்க்சிஸ்டு கட்சி, அமெரிககாவுக்கு எதிராக அத்து மீறிப் பேச முடியுமா? அதனால்தான் அடக்கி வாசிக்கிறார்கள்.

"முழுவதும் நனைந்த பின் முக்காடு எதற்கு?" என்கிறார் மன்மோகன் சிங். "முக்காட்டை எடுப்பதற்கு மட்டும் நாங்கள் அனும்திக்கவே மாட்டோம்" என்று முழங்குகிறார்கள் மார்க்சிஸ்டுகள் இதுதான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருவருக்கும் உள்ள 'கொள்கை' வேறுபாடு.

இன்றைக்கு 'பாஸ்' பொத்தானைத்தான் அமுக்கினோம் என்கிறார் யெச்சூரி.நெருக்கடி எப்ப வந்தது என்று கேட்கிறார்.

இவர்களுடைய வலைப்பதிவர் சந்திப்பு சொல்கிறார்...இந்த ஒப்பந்தமே நாங்கள் எதிர்த்தது (?) காரணமாகத்தான் மக்களுக்கு தெரியவந்துருக்கிறது என்கிறார்.
இது குறித்து தோழர் சந்திப்புக்கு சின்ன கட்டபொம்மன் அவர்கள் போட்ட பதில் பின்னூட்டத்தை கருத்து சுதந்திரம் மிக்க சந்திப்பு அவர்கள் பிரசுரிக்காமல் விட்டதால் அதனை இங்கு இணைத்துள்ளோம்.

தோழர் சந்திப்பு அவர்களே!

அணு சக்தி ஒப்பந்தத்தை மக்களிடம் அம்பலப்படுத்தியதில் இடதுசாரிகள் எனக் கருதிக்கொள்பவர்களின் பங்களிப்பை ஒத்துக்கொள்ளும் முன் ஒரு விசயம்.. இது ஏதோ தனியானதோர் ஒப்பந்தம் போலவும் இதற்கும் அமெரிக்க ராணுவ உடன்பாட்டுக்கும் சம்பந்தமில்லாதது போலவும் தோற்றத்தை உருவாக்குவது ஏன்? 2005இலேயே அமெரிக்காவுடன் உடன்பாடு எட்டப்பட்டு விட்டது..அதன் தொடர்ச்சியாகத்தானே 123?

இதெல்லாம் ஏதோ இன்றைக்குதான் தெரிந்தது போல பாராளுமன்றத்தில் சவடால் அடித்தது தவிர போலிகள் சாதித்தது என்ன?

கடந்த 2 ஆண்டுகளாக இதனை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லாமல் இருந்தது ஏன்?

நாட்டை அடிமையாக்குகிறது இந்த அரசு என்பது தெளிவான பின்னும் ஆதரவை திரும்பப்பெறுவதில் என்ன தயக்கம்? தேர்தலை சந்திக்கத் தயங்குவதுதானே? வங்காள விவசாயிகள் சிந்திய ரத்தம் வரும் தேர்தலில் காவு கேட்டு விடும் எனும் பயமா? காரத்தும், யெச்சூரியும் மாத்தி மாத்தி அடித்த சவடால்கள் கடைசியில் "வாபஸ் பெறுவதைப் பற்றி காங்கிரசு முடிவெடுக்கட்டும்" என்று பிளேட்டையே மாத்திப் போட்டதைப் பார்க்கும்போது, தப்பித்தவறி யெச்சூரியோ, காரத்தோ கோடம்பாக்கம் பக்கம் வந்தார்களென்றால் வடிவேலுவின் மார்க்கெட் சரிந்து விடும் என்பது நிச்சயம்!
Related:
..
..

Labels: ,

நாட்டை விற்ற மாறன்களின் புதிய தருமதுரை வேடம் !

2004 ஆம ஆண்டில் 'சன் பவுன்டேசன்' என்ற அமைப்பை உருவாக்கி 'முரசொலி மாறன்' நினைவாக
வருடந்தோறும் ரூபாய் 1 கோடியினை முரசொலி மாறன் மகன்களான கலாநிதி மாறனும், தயாநிதி மாறனும் மக்களுக்கு வழங்கிவருகின்றனர்.
..

..
சமீபத்திய நாட்களில் தயாநிதி மாறனும் அவரது குடும்பத்தினரும் கல்லூரிகளுக்கும், மருத்துவமனை, முதியோர் ஆதரவு காப்பகம் உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று விழாக்களில் பங்கேற்று பல லட்சங்களை நன்கொடையாகத் தருகிறார்கள்.

இவை நாளிதழ்களிலும், அவர்களது ஊடகங்களிலும் விளம்பரப்படுத்தப்படுகின்றன.

இப்படி தர்மகர்த்தாக்களாக இன்று அவதாரம் எடுத்து இருக்கும் மாறன்களின் பின்புலம் என்ன என்று பார்த்தால் தான் இவர்களின் உண்மையான நோக்கத்தைத் தெரிந்து கொள்ளமுடியும்.

முரசொலி மாறன் வர்த்தகத்துறை அமைச்சராக இருந்த போதுதான் இந்தியாவில் 1029 பொருட்கள் தங்குதடையின்றி வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் WTO வின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இந்தியாவின் லட்சக்கணக்கான சிறு தொழில் கூடங்கள் சீல் வைத்து மூடப்பட்டன.

பின்னர் இவரது மகன் தயாநிதி மாறன் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருந்த போதுதான் நோக்கியா போன்ற பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கொள்ளையடிக்க ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.

இரு மாறன்களின் பதவியையும், கலைஞர் அவர்களின் பதவியையும் வைத்துக்கொண்டு பல தொலைக்காட்சி அலைவரிசைகளை ஏற்படுத்தித் தங்கள் சொத்தின் மதிப்பை உயர்த்தி இன்று ஆசியாவிலே பெரிய கோடீஸ்வர்களாக மாறி விட்டனர்.

2001இல் ஆசியாவிலேயே 4ஆவது கோடீஸ்வரராக இருந்த கருணாநிதி குடும்பம் தற்போது இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளது.

1) 1951இல் ஒரு வீடு மட்டுமே இவர்களுக்குச் சொந்தம். ஆனால்

2) 1992இல் 80 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கு அதிபதி

3) 2006இல் 17000 கோடியாக வளர்ச்சி. இது தவிர கருப்பில் 60000 கோடி

4) சன் நெட் 19 அலைவரிசைகள்

5) ஏர்செல்

6) பூங்கி டெக்ஸ்டைல்ஸ்

7) சேஷசாயி காகித ஆலை

8) தினகரன் 480 கோடி

9) விகடன் 100 கோடி

10) தமிழ் முரசு 280 கோடி

11) குங்குமம் 150 கோடி

12) முரசொலி 90 கோடி

குறிப்பு: மதுரை தினகரன் அலுவலகத் தாக்குதல் சம்பவத்துக்கு முன் வந்த மொத்தக்கணக்கு இது. இப்போது இதை இரண்டு தொகுப்பாய்ப் பிரித்துப் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

(நன்றி: மண்மொழி வெளியீடு 17, 2007 ஜூலை-ஆகஸ்ட்)

முன்பு விழாக்களில் கலைஞர் பங்கேற்று சன் பவுண்டேசன் உதவியினைக் கொடுத்து வந்தார். தற்போது தயாநிதி மாறன், அவரது மனைவி, காவேரி கலாநிதி மாறன் என குடும்பம் சகிதமாக சென்று விழா எடுத்து 5 லட்சம் 10 லட்சம் என்று கொடுத்து தமிழகம் முழுவதும் சுற்று பயணம் செய்து வருகின்றார்.

இவ்வாறு தர்மகர்த்தா வேஷம் தரிப்பது தரகுமுதலாளியாக வளர்ந்துவிட்ட மாறன்களின் புதிய கண்டுபிடிப்பு இல்லை.


கொக்கோக்கோலா, நோக்கியா போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் கண்டுபிடிப்பு தான் இவை . மக்களை தாங்கள் கொள்ளையடிப்பது தெரியாமல் இருப்பதற்காக இன்று வள்ளல்களாக அவதரித்து பள்ளிகளில் குடிதண்ணீர் வசதி செய்து கொடுப்பது ,மருத்துவமனை கட்டிக் கொடுப்பது என்று தருமதுரை வேஷமிடுவதற்கு முன்னோடி இவர்கள்தான்.

இன்று தயாநிதி, மக்களை பார்த்து கூறுகிறார், "உங்கள் முகத்தில் நாங்கள் எங்கள் அப்பாவின் சிரிப்பை பார்ப்பதாக" வென்று.

ஆனால் மக்கள் இன்று வாழவழியற்றுப் போனதற்கு மாறன்கள் அமைச்சர்பதவிகளில் இருந்த போது செய்த 'பொருளாதார சீர்திருத்தத் திட்டங்கள்' தான் காரணம்.

இவை போன்ற எல்லாச் 'சீர்திருத்தவாதிகளை'ப் பற்றி அறியவிடாமல் தங்கள் தொலைக்காட்சி, பத்திரிக்கை மூலம் கலாச்சார, ஆபாச சீரழிவுகளைப் பரப்பி மக்களின் மூளையினை மழுங்கடித்து வருவதும் தான் காரணமாக இருக்கிறது.

இவ்வாறு பல்லாயிரக்கணக்கான கோடியினை கொள்ளையிட்டு சேர்த்த மாறன்கள் ;

வெறும் 1 கோடியினை தருவதற்கு பவுண்டேசன் வைத்து கொள்வதும், யாரிடமும் நன்கொடை வாங்காமல் செய்து வருகிறோம் என்று சொல்லிக் கொள்வதும் தான் சகிக்கமுடியவில்லை.
Related:

Labels: , ,

Friday, August 24, 2007

அமெரிக்க அடிமை நாய் மன்மோகன் வழங்கும் 123 அல்லது அடிமை சாசனம் !!





1945 ஆம் வருடம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி ஹிரோஷிமா நகரின் மீது அணுகுண்டு வீசி 70,000 மக்களைக் கொன்று குவித்ததுடன் இன்றுவரை அங்கே பிறக்கும் குழந்தைகள் ஊனமுற்றவர்களாகப் பிறக்கும் அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியது அமெரிக்கா. அதற்கு 3 நாட்களுக்குப் பிறகு இன்னொரு ஜப்பானிய நகரமான நாகசாகியில் தனது கொலைவெறியை அரங்கேற்றி 74,000 மக்களைக் கொன்று குவித்தது.


மனித குலத்தையே வேரறுக்கக் கூடிய இந்த அணு ஆயுதத்தை முதன்முதலில் மனிதன் மீது பிரயோகித்த பெருமையைத் தன்னுடைய தாக்கிக் கொண்டாலும், அந்த அணுசக்தியிலிருந்து பலன் பெற்று மின்சாரம் தயாரிக்கும் வழிமுறை அமெரிக்காவிடம் இல்லை. சோவியத் ரஷ்யாவில்தான் 1954 ஆம் ஆண்டு முதன் முதலில் அணுசக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்பட்டது. ஆனால் அதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 1951 ல் இருந்தே இந்தியாவில் அணுசக்தி குறித்த ஆராய்ச்சிகளையும், அணு உலைகளை அமைத்து அணுசக்தியை மக்கள் நலனுக்குப் பயன்படுத்துவது பற்றியும் இந்திய அணுசக்தித் துறையின் தந்தை என அழைக்கப்படும் ஹோமி பாபா திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளார்.


அப்போதிருந்தே உலக அளவில் அணுசக்தித் துறையில் மற்ற நாடுகளுடன் இந்தியா போட்டி போட்டு வளர்ந்து வருகிறது. இன்றளவும் அதிவேக ஈனுலைகள் என்ற அணுசக்தித் தொழில்நுட்பத்தில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. தோரியம் எனும் தனிமத்தைக் கொண்டு இயங்கக் கூடிய இந்த "அதிவேக ஈனுலைகள்" யுரேனியம் கொண்டு இயங்கும் மற்ற நாட்டு அணு உலைகளை விட 600 மடங்கு அதிக சக்தியைக் கொண்டது என்று முன்னாள் இந்திய அணுசக்தித்துறைத் தலைவர் சிதம்பரம் கூறியுள்ளார்.


இது மட்டுமின்றி வேறெந்த நாட்டின் உதவியுமின்றி சொந்தநாட்டிலேயே தயாரித்து, இதுவரை இரண்டு முறை அணு குண்டு வெடித்துச் சோதனை நடத்தியுள்ளது இந்தியா.இவ்வாறு மின்சாரத் தேவைக்கான அணுசக்தி ஆராய்ச்சி தொடங்கி, பக்கத்து நாடுகளை மிரட்டி அணுகுண்டு வெடிப்பது வரை இந்தத் துறையில் சொந்தத் தொழில்நுட்பத்தையே இந்தியா பயன்படுத்தி வந்துள்ளது.


ரஷ்யாவின் உதவியுடன் கல்பாக்கத்திலும், அமெரிக்காவின் உதவியுடன் தாராப்பூரிலும் அணுமின் நிலையங்களை நிறுவினாலும் அவை முற்றிலும் இந்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவையாகவே இருந்துள்ளன.

..
ஆனால் இப்போது '123 ஒப்பந்தம்' என்ற பெயரில் அமெரிக்காவுடன் இந்தியா செய்துள்ள அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவின் இறையாண்மைக்கு ஆப்பறையும் விதத்தில் வந்துள்ளது.


இந்த ஒப்பந்ததின்படி அடுத்த 40 ஆண்டுகளுக்குத் இந்தியா அமெரிக்காவிடமிருந்து யுரேனியத்தை இறக்குமதி செய்து கொள்ளும். அப்படி இறக்குமதி செய்யும் யுரேனியத்தைக் கொண்டு மின்சாரம் மட்டுமே தயாரிக்க வேண்டும், அணுகுண்டு தயாரிக்கக் கூடாது. மீறி அணுகுண்டு தயாரித்தால் அமெரிக்கா கொடுத்த யுரேனியத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளும். இந்த யுரேனியத்தை நம்பி இந்தியா பல லட்சம் கோடி செலவில் அணு உலைகளை உருவாக்கியிருந்தாலும் அது பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. அணுகுண்டு வெடிக்காவிட்டாலும் அமெரிக்காவின் அனைத்து ராணுவ நடவடிக்கைகளுக்கும், வெளிநாட்டுக் கொள்கைகளுக்கும் இந்தியா ஒத்துழைப்புத் தரவேண்டும்.


ஏற்கனவே இரண்டு முறை ஈரான் -க்கு எதிராக ஐ.நா வில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு இந்தியா வாக்களித்து உள்ளது.


இப்போது ஈரானை தாக்க அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. அவ்வாறு தாக்குதல் தொடுக்குமானால் அப்போது இந்தியா கூலிப்படை அனுப்பி உதவ வேண்டும்.


அதேபோல மற்ற நாடுகள் அனுமதிக்காத 'நிமிட்ஸ்' போர்க் கப்பலை இந்தியக் கடலோரத்தில் இந்தியா அனுமதித்து உள்ளது. அந்த கப்பல் போர்க்கழிவுகளை கொட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.


இதேபோல எதிர்காலத்திலும் இதுபோன்ற கப்பல்களை தங்கு தடையின்றி வந்து போக அனுமதிக்க அமெரிக்கா நிர்பந்திக்கிறது.


அணு ஆராய்ச்சியை இந்திய விஞ்ஞானிகளைக் கொண்டு, குறைந்த விலைக்கு நடத்தித் தர அமெரிக்கா கோருகிறது.அணு உலைகளை கண்காணிக்க நிபுணர்குழுவினை இந்தியாவுக்குள் வந்து போக அணுமதிக்க வேண்டும் என்று நிர்பந்திக்கிறது..


இப்படிப்பட்ட நாசகார, மோசடியான ஒப்பந்தத்தை தாய்நாட்டின் மீது பற்றுக் கொண்ட யாரும் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள்.


ஆனால் அமெரிக்க அடிமை நாயாய் சேவகம் செய்யும் மன்மோகன் சிங் இதனை ஏற்று கொண்டுவிட்டார். மக்களையே சந்திக்காமல், தேர்தலிலேயே நிற்காமல் இந்த நாட்டின் பிரதம மந்திரியாய் உட்கார்ந்து கொண்டு இப்படி தாய்நாட்டை அமெரிக்காவுக்கு விலை பேசியுள்ளார்.


"நீ என்ன வேண்டுமானாலும் கூறிக்கொள், உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள். ஆனால் ஒப்பந்தத்தை திரும்ப பெற முடியாது. குறைந்த பட்சம் இது குறித்து விவாதம் செய்ய முடியாது." என்று மன்மோகன் சிங் கூறிகிறார்.


அமெரிக்க எஜமானன் போட்ட உத்தரவை இந்திய அடிமைகள் பரிசீலிப்பதா என்று இவர் விடும் அறிக்கைகளைப் படிக்கும் போது சிறிதளவேனும் தேசப்பற்றுடைய எவருக்கும் ரத்தம் கொதித்துப் போகும்.


இதையெல்லாம் விட்டுவிட்டு அணு குண்டு வெடிக்க முடியாது என்று கூறி இதனை எதிர்க்கிறது பா.ஜ.க. இந்த தேசவிரோத ஒப்பந்தம் நிறைவேறனுமா, வேண்டாமா என்று இவர்கள் கூறுவதில்லை. என்ன செய்ய முடியும், காங்கிரஸ் அல்சேஷன் என்றால் பா.ஜ.க டாபர்மேன் இல்லையா?


இந்த ஒப்பந்தத்தை குறித்த பேச்சுவார்த்தையை ஆரம்பித்துவைத்ததே வாஜ்பாயிதான் என்று குட்டை உடைத்துவிட்டார் எம்.கே.நாராயணன் (இந்திய பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்) அத்தோடு இவர்களின் குலைக்கும் சத்தம் ஓய்ந்துவிட்டது.


"ஒப்பந்ததை ரத்து செய்யாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டிய போலிக் கம்யூனிஸ்டுகளைப் பார்த்து" மன்மோகன் சிங் "உங்களால் என்ன செய்ய முடியும், ஆட்சிக்கு ஆதரவை வாபஸ் வாங்கிக் கொள்வீர்கள்; வாங்கிக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டார்.


எனது எஜமானனுக்குச் சேவை செய்ய முடியாத ஆட்சி இருந்தாலென்ன போனால் என்ன கருதுகிறார் போலும்.


இந்தப் பிரதமர் பதவி அமெரிக்கா எனக்குப் போட்ட பிச்சை, 123 ஒப்பந்தத்திற்காக அதனை இழக்கவும் நான் தயங்கமாட்டேன் என்று கூறிய உடன் போலிக் கம்யூனிஸ்டுகளுக்கு பா.ஜ.க வின் மதவெறி நினைவுக்கு வர ஆட்சியையெல்லாம் கவிழ்க்க மாட்டோம் சும்மா இது பற்றி விவாதம் மட்டும் பண்ணினால் போதும், ஓட்டெடுப்பு கூட வேண்டாம் என்று இறங்கிவந்தார்கள்.


ஆனால் மன்மோகன் சிங்கோ தான் பிடித்த அமெரிக்க உச்சாணிக் கொம்பில் நின்று கொண்டு சிறிது கூட இறங்காமல் உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பே என விவாதம்கூட செய்ய முடியாது என்று கூறிவிட்டார்.


உடனே 'தோழர்கள்' கடுமையான விளைவுகள் நேரிடும் என்று திரும்பவும் லாவணிபாட ஆரம்பித்து விட்டனர்.


கடந்த 100 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட போர்களில் ஈடுபட்டு, உலகம் முழுவதிலும் பல லட்சம் மக்களைக் கொன்று குவித்த ஒரு ரத்தவெறி பிடித்த ஏகாதிபத்திய மிருகம் அமெரிக்கா. அதன் காலடியில் நமது நாட்டை,அதன் இறையாண்மையை, நமது எதிர்காலத்தை, மற்ற நாடுகளுடன் நமது உறவை அடமானம் வைக்கும் அடிமைச்சாசனம்தான் 123 ஒப்பந்தம்.


இந்த உண்மை எல்லா அரசியல்வாதிக்கும் தெரியும்.

Related:


ஈராக் : அமெரிக்கப் பயங்கரவாதத்தின் இரத்தச் சாட்சி



அமெரிக்க பயங்கரவாதத்தின் வரலாறு


உலகில் அதிகமாக தூக்கு தண்டனையினை நிறைவேற்றி மனிதர்களை கொல்வதும் அமெரிக்காதான் !!




Labels: ,

Thursday, August 23, 2007

உலகில் அதிகமாக தூக்கு தண்டனையினை நிறைவேற்றி மனிதர்களை கொல்வதும் அமெரிக்காதான் !!

அமெரிக்க போர்வெறியர்கள் 'சுதந்திரம்', 'பாதுகாப்பு' என்ற பெயரில் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்து மற்ற நாட்டு மக்களை கொல்கின்றனர். தங்கள் நாட்டில் 'சட்டம்' என்று தூக்கு தண்டனை மூலம் மக்களை கொல்கின்றனர்.

உலகில் அதிகமான மக்களை சிறையில் வைத்துள்ள நாடும் அமெரிக்காதான். அதிலும் கருப்பின மக்கள் தான் அதிகம்.

Related:

ஈராக் : அமெரிக்கப் பயங்கரவாதத்தின் இரத்தச் சாட்சி

அமெரிக்க பயங்கரவாதத்தின் வரலாறு

Labels: ,

Wednesday, August 22, 2007

"காட்டு நடனம்"

சித்திரவதைச் செய்யப்பட்ட
எங்கள்
மார்புகளில் இருந்து
வசீகர வயலின்கள்
உயிர்த்தெழும்பும்
சுருள் வேலிக் கம்பிகள்
அவற்றின் தந்திகளாய்
நாதமெழுப்பும்
உடைந்த
எழும்புத் துண்டுகளோ
புல்லாங்குழல்களாய்
முகிழ்த்தெழும்பும்
அங்கு
ஒரு காட்டு நடனம்
அனல் கக்கும்.
..
- மிக்கிஸ் தியோடோ ராகிஸ்

(கிரேக்க கவிஞர், அரசியல் ஆய்வாளர்)

Labels:

Monday, August 20, 2007

நலம், நலமறிய நக்சல்பரி...

நக்சலைட்டுகளை
இயங்கவிடாமல் செய்துவிட்டதாம் அரசு
நம்புகிறார்கள் சிலர்.

உண்மையில்
இயங்கமுடியவில்லை மக்களால்.
.
கத்திக்கு எத்தனைச் சாணைபிடித்தாலும்
ஒரு இழவு விசாரித்துவர
பேருந்து கட்டணத்தைப்
பிடிக்க முடியாமல்
துருப்பிடித்துக் கிடக்கிறது
தொழிலாளியின் வாழ்க்கை.
.
அங்கங்கே ஆள் வைத்து
பணத்தாலே கண்ணி வைத்து
எத்தனை முறை கிளப்பினாலும்
எழுப்ப முடியவில்லை
'எம்ப்ளாய்மெண்ட்' எண்ணை.
.
ராகு மூணாம் இடம் போகிறார்
கேது நாலாம் இடம் வருகிறார்
கேட்ட பவுனைப் போட முடியாததால்
அக்காமார்கள் மட்டும்
அடுப்படியிலேயே கிடக்கிறார்கள்.
.
ரேசன் அரிசி வடித்த கஞ்சியில்
சலவை செய்த உயிரை உடுத்தி உடுத்தி
ராத்திரி அறுப்புக்குப் போய் வந்து படுத்த
அம்மாவின் கண்கள்
கடைசிவரை திறக்கவே இல்லை..
.
ஊரெல்லாம் கடன்பட்டு
தலைமறைவு வாழ்க்கை நடத்தும்
உங்களுக்குத் தெரியாதா?
புரட்சிக்குக் கடன்படாமல்
இனி இயங்க முடியாது என்பது.

-துரை.சண்முகம்

நன்றி : புதிய கலாச்சாரம் ஜூலை 2000

Labels:

Saturday, August 18, 2007

இருப்பதற்கு வாய்ப்பே இல்லை ! எது கடவுள் தானுங்க !!

ஆத்திகமும், நாத்திகமும் ஒன்றுக்கொன்று நேர் முரணானவை. இவைகளுக்கிடையே சமரசம் கிடையாது; இருக்க முடியாது. ஆத்திகம் வெறிபிடித்து கூத்தாடத் தொடங்கியுள்ள இந்த நேரத்தில், ஆத்திகத்தின் அடித்தளத்தை விஞ்ஞான அறிவு கொண்டு, விஞ்ஞான ஆய்வு முறை கொண்டு தகர்த்தெறிய வேண்டும். இது ஒவ்வொரு முற்போக்காளனின் கடமை என்பதை மறப்பதற்கில்லை.

இதற்கு கீழே உள்ள உரையாடலை ஓரளவு உதவலாம். இன்றைய வளர்ந்துவிட்ட விஞ்ஞானத்தின் ஆதாரங்களையும் கணக்கிலெடுத்துக் கொள்ளுங்கள்.

நாத்திகர்: உயிரினங்களே இல்லாத ஒரு காலம் இருந்தது என்பது தெரியுமா?

ஆத்திகர் : தெரியும். பூமி என்ற கோளம் உயிரினங்கள் தோன்றி வளர்வதற்கு லாயக்கான நிலை அடையவே கோடி வருடங்கள் பிடித்தன என்று விஞ்ஞானிகள் உரைக்கின்றனர்.

நா:ஆக, உயிரினங்களே இல்லாத காலத்தில் பூமி இருந்ததல்லவா?

ஆ: இருந்தது.

நா: அக்காலத்தில் - உயிரனங்களே இல்லாத காலத்தில் - பூமி இருந்தது. ஆனால் எண்ணம், சிந்தனை இருந்திருக்க முடியுமா?

ஆ: இருந்திருக்காது.

நா: ஆகவே பிரபஞ்சமும் , அதன் பகுதியாக பல கோளங்களும் வெட்ட வெளியில் சுழன்று கொண்டு இருந்தன. அதாவது பொருள் அல்லது வஸ்து இருந்தது. சிந்தனை இருக்கவில்லை.... என்ன முழிக்கிறாயே... சரிதானா?

ஆ: இது சரியாகத்தான் படுகிறது.

நா: ஆகவே , பொருள்தான் முதலில் இருந்தது. அடிப்படையானது, பின்னால் ஒரு கட்டத்தில் பொருளுக்குள் ஏற்பட்ட மாற்றங்களினால் உயிர் என்ற குணத்தைப் பொருள் அடைந்தது. அந்த உயிர்ப்பொருள் எத்தனையோவித மாற்றங்களடைந்தது. அந்த மனிதனின் சிந்தனை,எண்ணம் என்பது பிந்தியது என்பதில் சந்தேகம் கொள்ள இடமுண்டோ?

ஆ: இல்லை.

நா: யோசித்துப் பார். பூதத் சாத்திரத்தை, வான சாத்திரத்தை, பிராணி சாத்திரத்தை, அதன் ஒரு பகுதியான பரிணாம சாத்திரத்தை ...ஏன் இன்று வளர்ந்துள்ள எல்லா சாத்திரங்களையும் மறுத்து ஒதுக்கித் தள்ளினால்தான் இந்தக் கூற்றைத் தள்ள முடியும்.

ஆ: அது வாஸ்தவம்தான். பொருள் முந்தியது, சிந்தனை பிந்தியது என்பது மறுக்க முடியாத விஞ்ஞான உண்மைதான்.

நா: சரி வேறு ஒரு கோணத்திலிருந்து இவ்விஷயத்தை ஆராய்வோம். பொருள் அல்லது வஸ்து அழிவடைகிறதா?

ஆ: இது என்ன? ஒன்றும் புரியவில்லையே?

நா: கல் என்ற பொருள் எடுத்துக் கொள்வோம். அதைச் சுக்கு நூறாக உடைத்து மாவு போன்ற பொடியாக்கலாம், கல் என்ற உருவம் போய் விடுகிறது. இல்லையா?

ஆ: ஆம்; பொடியாகப் போய்விடுகிறது.

நா: 'கல்' அழிந்து விட்டது. என்று சொல்லலாமா?

ஆ: சொல்லலாம்.

நா: சொல்லக்கூடாது ! கல் என்ற உருவம் தான் அழிந்தது. 'பொடி' என்ற உருவம் வந்துள்ளது. கல்லுக்குள் இருந்த அணுக்கள் அழியவில்லை. "பொருளின் உருவம்" தான் மாறிற்று.

ஆ: அது மெய்தான்.

நா: அதே போல 'ஐஸ்' என்ற பொருளைப் பார்ப்போம். கையில் எடுத்துப் பார்ப்பதற்கு முன் கசிந்து உருகி நீராக ஓடி விடுகிறது.

ஆ: 'ஐஸ்' என்ற உருவத்தை விட்டு 'நீர்' என்ற உருவத்தை அடைகிறது.

நா: அந்த நீரை ஒரு பாத்திரத்தில் வைத்து அடுப்பின் மீது வைத்தால் என்ன ஆகிறது?

ஆ: சூடு ஏறிய பின் ஆவியாக மாறிக் காற்றில் கலந்து விடுகிறது.

நா: நீர் என்ற உருவம் மாறி 'ஆவி' என்ற உருவத்தை அடைகிறது. அந்த ஆவியும் குவியலாக பாத்திரத்திலிருந்து வெளிக்கிளம்பும் பொழுது கன்ணுக்குத் தெரிகிறது. ஆனால் காற்றிலே கலந்தபின் கண்ணுக்கும் தெரிவதில்லை.

ஆ: ஆம்.

நா: ஆனால் நீரில் இருந்த அணுக்கள் அழிந்துவிட்டனவா?

ஆ: இல்லை.ஐஸ் நீராக மாறிய பொழுது ஐஸில் இருந்த அணுக்கள் அழியவில்லை. அதேபோல நீர் ஆவியாக மாறிய பொழுது நீரில் இருந்த அணுக்களும் அழியவில்லை. திடமாயிருந்த பொருள், திரவமாக மாறி , பின் ஆவியாக மாறிற்று. ஆனால் அழியவில்லை.

நா: அதே போல பிரபஞ்சத்தில் உள்ள எந்தப் பொருளும் வஸ்துவும் - கல்லோ , மண்ணோ, கட்டையோ, மரமோ, உயிருள்ளதோ, உயிரற்றதோ - எந்த நிலையிலும் அழிவதில்லை. நிலைமைக்குத் தகுந்த உருவமாற்றம் ஏற்படுகிறது.; அழிவதில்லை - இது சரிதானே?

ஆ: சரிதான்.

நா: இதைத்தான் பொருளின் அழியாத்தன்மை (Law of Conservation of Matter) என்று கூறுகின்றனர். பொருள் அழிவதேயில்லை என்றால், என்றென்றும் இருந்தது என்று அர்த்தம் அது சரி தானே?

ஆ: ஆம், அப்படித்தான் அர்த்தம்.

நா: அதாவது, பிரபஞ்சத்தில் உள்ள பொருள்கள் அனைத்தும் இல்லாதிருந்த காலமே இல்லை என்பது இதன் தர்க்கரீதியான முடிவு.
ஆ: ஆம் என்றென்றும் இருந்து வந்துள்ளன என்பதே முடிவு.

நா: அப்படியானால் சிருஷ்டி, அல்லது படைப்பு என்பதற்கு இடமேது?

ஆ: ம்.....ம்... இல்லைதான்

நா: ஆக படைப்பும் இல்லை; படைத்தவனும் இல்லை - கடவுள் இல்லை - என்பது மறுக்க முடியாத விஞ்ஞான சாத்தியம்.

ஆ: அப்படித்தான்.... இருந்தாலும் என்னமோ மனதில் சங்கடம் ஏற்படுகின்றதே?

நா: இவ்வளவுக்குப் பின்னால் சங்கடமாயிருக்கிறது என்கிறாயே? - ஒரே வார்த்தையில் சொல்லியிருந்தால் (கடவுள் இல்லை என்று) எப்படியிருந்திருக்கும்; கோபப்பட்டிருப்பாய்; ஆத்திரப்பட்டிருப்பாய்; அறிவு ரீதியான ஆய்வுக்கு முனையமாட்டாய். ஒரு வேளை வெறிபிடித்த ஆத்திகனாகக்கூட மாறியிருப்பாய் ! இப்போது இம் முடிவு விஞ்ஞான ரீதியாக மெய்ப்பிக்கப்படுகிறது என்று ஏற்றுக் கொண்டு விட்டாய்.... இன்னும் சில நாட்கள் ஆகிவிட்டால் மனதுக்கும் சங்கடமிருக்காது. போய் வா!

(ஏ. பாலசுப்ரமண்யம் அவர்கள் எழுதிய "கடவுள் உண்டா இல்லையா?" என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது)
Related:
..
..

Labels: , ,

Wednesday, August 15, 2007

நம்புங்கள் இது சுதந்திர இந்தியா தான் ! ஏழ்மையில் வாழ்வதற்கு !!

Saturday, August 11, 2007

எங்க நாடு ஆகுது வல்லரசு அமெரிக்கா போலே...


இன்றைக்கு நாடு வல்லரசு ஆகிவருகிறது என்ற மாயயை ஒருபுறம் தோற்றுவித்துக்கொண்டே மறுபுறம் நாட்டை படுவேகமாக அந்நியனுக்கு விற்று வருகின்றார்கள் இந்த மக்கள் விரோத ஆட்சியாளர்கள்.

நாட்டை பகுதி பகுதியாக அந்நியனுக்கு சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் தாரை வார்க்கிறார்கள், இன்னொருபுறம் அனைத்து துறைகளிலும் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிச்சு உள்நாட்டு தொழில்களை நாசமாக்குகின்றனர்,அனுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் அமெரிக்கனுக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுக்கின்றனர்.

இதில் எந்த ஓட்டுக்கட்சிக்கும் கருத்துவேறுபாடு என்பதே கிடையாது.

உதாரணமாக தனியார்மய, தாராளமய, உலகமய கொள்கையினை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நடைமுறைப்படுத்த மாட்டோம், உலக வர்த்த கழகத்தில் இருந்து இந்தியா வெளியேறும் என்பது போன்ற வாக்குறுதிகளை எந்த ஓட்டுக்கட்சிக்கார்களும் சொல்வது கிடையாது.

இன்றைக்கு சிறப்பு பொருளாதார மண்டலத்தை எதிர்க்குறோம்; அனுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்குறோம்; ரிலையன்ஸை எதிர்க்குறோம் என சொல்கிற எவரும் இதற்கனைத்துக்கும் அடிப்படையான மேலே உள்ள விஷயத்தை பற்றி மூச்சு கூட விடுவதில்லை.

ஏன்னா இவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் இதையேதான் நடைமுறைப்படுத்த போகிறார்கள்.இப்பவே மற்ற மாநிலங்களிலும் தங்களுடைய கட்சி ஆட்சியிலும் இத்தகைய கொள்கைகள் தான் நடைமுறைப்படுத்துகிறது என்றும் இந்த ஓட்டுக்கட்சி ஆட்சியாளர்களுக்கு தெரியும்.

ஆக நாடு காலனியாக்கப்பட்டு வருவதில், காலனியாக்குவதில் காங்கிரஸ், பா.ஜ.க, போலி கம்யூனிஸ்டுகள், தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க, சரத்குமார் என அனைவருக்கும் முழு சம்பந்தம்.
..
இதை எப்படி ஆக்குவது என்பதில் தான் தங்களுக்குள் வேறுபடுகின்றனர்.
..
இப்படிப்பட்ட நிலையிலும் இன்னமும் நாடு முன்னேறுது என்று கூறுபவர்கள் மேலே உள்ள "இந்தியாவின் 83 கோடி பேரின் தினசரி வருமானம் ரூ 20" என்பதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்.
..
இனியும் இந்திய ஆட்சியாளர்கள் மற்றும் கலாம்களின் பேச்சை நம்பிக்கொண்டு கனவு காண முயல்வதற்கு எந்த அடிப்படையும் இல்லை.

போராடுவதை தவிர வேறு மாற்று இல்லை என முகத்தில் அறைந்து சொல்கிறது தினமும் வரும் செய்திகள்.
Related :
..

Labels: , ,

Saturday, August 04, 2007

ஈராக் : அமெரிக்கப் பயங்கரவாதத்தின் இரத்தச் சாட்சி !