Tuesday, April 03, 2007

"மரத்துப் போதல் "




"என்ன மாமா கீத்து வுடுறீங்களா?" விசாரித்துக் கொண்டே ராமசாமி மாமாவை நெருங்கினேன். "ஆ....வா சரவணா...எங்க வயித்துக்கு சோத்த வுடுறதே பெரிய பாடாயிருக்கு.இதுவ எங்கேயிருந்து கீத்த வுடுறாது. எல்ல கீத்தும் மக்கிப் போயி உளுத்து மொட்டுது. நம்ம கிருஷ்ண மூர்த்தி வைக்கலு குத்தான். அதான் பரப்பிவுட்டுகிட்டு இருக்கன். அப்புறம் ஊருல பாப்பா , கொளந்தையெல்லாம் ந்ல்லா இருக்கா ? "



"உக்காரு. என்ன மண்ண கெடக்கேன்னு பாக்குறியா? எல்லாம் இந்த உள்ளார வலை வச்சிகிட்டு தெனம் ஒரு கூடை மண்ண நோண்டி தள்ளுது . உனக்கும் எனக்கும் இந்த வூட்ல ஒண்ணும் இல்லன்னு தெரியும். எலிக்கும் பூனைக்கும் தெரியுதா? பூனை மேல பிரிகட்டி அடிக்குது. எலி கீழே வேல பாக்குது. எத்தன மொறதான் பொகை வச்சி பிடிக்கிறது. சனியன் அத்து போவனாங்குது. மூட்டை மூட்டையா நெல்லு வெச்சிருக்குறவன் வீட்லகொட இத்தன எலி நம்மளகத்துது. ஹா...ஹா... "தனது தூய சோகமாக எப்பொழுதுமே சொல்லியது கிடையாது இராமசாமி மாமா.



இந்த வருஷம் ஒரு பவுனு வாங்கியே ஒரு நல்லது கெட்டது செஞ்சிக்கல என்று புதிதாக எதையும் அடைய முடியாத சோகத்தைப் பிறரைப் பாதிக்கும் வண்ணம் உடுக்கமாகச் சொல்லும் நடுத்தர வர்ககப் பேர்வழிகளுக்கு மத்தியில் விவசாய வாழ்க்கையின் சோகத்தை விளையாட்டகச் சொல்லும் மாமாவின் பேச்சு எனக்கு வியப்பாக இருக்கும்.



"என்னமோ போ சரவணா...எங்க தாத்தா , அப்பாரு, இப்ப எங்ககாலம். இன்னமும் இந்த மண்ணு தரய மாத்த முடுயல. நாங்களும் மூணு தலமொறய உழை உழைன்னு உழைக்கிறோம். இந்த வீட்ட பிரிச்சும் வெல பார்க மூடியல, நம்ம ஒடம்ப பிரிச்சும் வேலை பாக்க முடியல. என்ன சரவணா சிரிக்கிற, ஒரு ஆறு மாசமாகவே கழித்துல விலி கொட டொடைன்னு டொடையிது. டாக்டாரு வேற பாரம் வெக்ககூடாதுன்னு சொல்லிட்டாரு. அமயஞ்சமயத்துக்கு நாத்துகட்டு தூக்கக் கூப்புடுவானுவ, இப்ப அந்த வேலயுங் கெடையாது. ஏதாவது தலைல தூக்குற மாதிரி வேலையிருந்தா, பசங்க கூப்புடவும் மாட்டேங்குறானுவ. ஏதோ கை, கால், நரம்பு இதுக்கு தனி வைத்தியம் இருக்காமல, எங்க வருமானம் வந்து ஒரு நோட்டை தேத்திகிட்டுத்தான் போய்ப் பாக்கனும்.


பாரு நாம்பாட்டுக்குப் பேசிக்கிட்டே இருக்குறேன். டீத் தண்ணி குடிக்கிறியா? உங்க அத்த கள்ளி ஒடைக்கப் போயிருக்கு. குழந்தை கொல்லபக்கம் நிக்கிறான்னு நெனக்கிறேன்." - எழுத்திருக்கப் போன மாமாவை கையைப் பிடித்து, " நீங்க ஒக்காருங்க, நான் எதுத்த வீட்டு குமார வுட்டு வாங்கி வரச் சொல்றேன்" என்று வலுக்கட்டாயமாக அவரை உட்கார வைத்தேன்.


முன்னமாதிரி கிராமத்துல ஒரு வேலையும் இல்ல சரவணா. நானும் பொட்டபுள்ளைய பெத்துட்டமேன்னு ஒரு வேலையும் பாக்கி வெக்கிறதில்ல. கும்மோணம் போயி காய்கறி வாங்கிட்டு வந்தும் யாவாரம் பண்ணி பாத்துட்டேன், நம்மள மாதிரிதான் ஊரு சனமும்? எங்க உருளக்கிழங்கை வாங்குறதுன்னு அதது பேசாம புளித் தண்ணிய கரைச்சி பொழுத ஓட்டிகிட்டு ஒருக்கு . வாழக்கொல்ல பத்துற வேலைக்கி இங்கேர்ந்து கத்ராமங்கலம் வரைக்கும் நடந்தே போயிருக்கேன் பாரு. நம்மதான் நாலெழுத்து படிக்காம கண்ணவிஞ்சி பெய்ட்டோம். இந்த காலத்து பொட்ட புள்ளைக்கி பவுனப் போட்டு அழகு பாக்குறத விட படிக்க வைக்கிறது நல்லதுன்னு படுது. வளர வளர அவள் நல்லவிதமா ஒருத்தன் கையில் பிடிச்சி குடுக்குணும்னா நாலு படியே சொல்றன் இந்த புள்ளைக்காகத் தான் உயிர வெச்சிகிட்டு வாழணும்னு தோணுது. இல்லனா இருக்கற நெலமைக்கி நாமள்ளாம் இருந்து என்னாவப் போவுதுன்னு தோணுது.


மாமா பேசிக் கொண்டே போதும் போது ஒரு இரண்டு மூன்று முறை அவருக்குப் பின்பக்கத்திலிருந்து ஏழு வயது மலர்க்கொடி அவர் தோளில் தொடர்ந்து தட்டிக் கூப்பிட்டுக் கொண்டே இடிந்தது. துயரத்தில் என்ன சொல்வதென்று வாயடைத்துக் கிடந்த நான் ஒரு கட்டத்துக்கு மேல் குழந்தை கூப்பிருவதைச் சொல்ல வேண்டிய நிலை வந்தது. "என்ன மாமா பாப்பா அப்பயிலேர்ந்து தோள்ல அடிச்சி கூப்பிட்டுகிட்டே இருக்குறா....முதல்ல அத என்னான்னு கேளுங்க. கொளந்த கைபடறது தெரியல," வெடுக்கெனத் திரும்பிப் பார்த்தவர்," ஆட ஆமா சரவணா.ஒரு மாசமா டீக்கடைக்கி தண்ணி துக்கி ஊத்தறனா அந்த எடமே மரத்துப் போச்சி அதான். என்னமோப்பா நீங்கள்லா, ஒரு வழியா ஊரவுட்டு நவுந்துட்டீங்க, நாங்க எங்க போறது? யாரு இடுக்கா?"

மாமாவின் தோள் மரத்துப் போனதை விட இப்படி கிராமத்தில் மாட்டிக் கொண்டவிவசாயிகளுக்காக ஏதுமே செய்யாமல் எனது வாழ்க்கை மரத்துப் போயிருக்கும் கொடுமை பயங்கரமாக இருக்கிறது எனக்கு. உங்களுக்கு?


சுடர்விழி

Labels: ,

2 Comments:

Blogger Thangamani said...

மிகவும் எதார்த்தமான நடையில், மிகவும் நெருக்கமாக உணர்ந்த விதத்தில் எழுதியிருக்கிறீர்கள். நன்றி!

7:16 AM  
Anonymous Anonymous said...

சுடர்விழி,

தமிழ்மண இடுகைகளுக்குள் படிக்காமல் தவற விட்டுவிட்டேன். பூங்காவிற்கு நன்றி. இப்போதுதான் அங்கிருந்து வந்தேன்.

இதயம் கனக்க அவர்களின் மொழியில் அப்படியே கேட்பதுபோல் உணரவைத்தது இப்படைப்பு. இன்று தொடர்ந்து என்பின்வந்துகொண்டே இருக்கும் இதன் வாசனை. இந்த ராமசாமிகளின் வாழ்க்கைகளை வெளிக்கொண்டுவரவேண்டும் தொடர்ந்து. எழுதுங்கள் இன்னும் நிறைய.

நன்றி.
செல்வநாயகி

11:18 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home