பாரதிதாசன் பாடல்கள்
பள்ளம் பறிப்பாய், பாதாளத்தின்
அடிப்புறம் நோக்கி அழுந்துக ! அழுந்துக !
பள்ளந்தனில் விழும் பிள்ளைப் புச்சியே,
தலையைத் தாழ்த்து ! முகத்தைத் தாழ்த்து !
தோளையும் உதட்டையும் தொங்கவை ! ஈன
உளத்தை, உடலை, உயிரைச் சுருக்கு !
நக்கிக்குடி, அதை நல்ல தென்று சொல் !
தாழ்ந்து தாழ்ந்து தாழ்ந்த நாயினும்
தாழ்ந்து போ ! குனிந்து தரையைக் கெளவி
ஆமையைப் போலே அடங்கி ஒடுங்கு !
மொட்டுப் புச்சியே ! புன்மைத் தேரையே
அழு, இளி, அஞ்சு, குனி, பிதற்று !
கன்னங் கடுத்த இருட்டின் கறையே,
தொங்கும் நரம்பின் தூளே ! இதைக்கேள் ;
மனிதரில் நீயுமோர் மனிதன் ; மண்ணன்று ;
இமை திற ; எழுந்து நன்றாய் எண்ணுவாய் ,
தோளை உயர்த்துச் சுடர் முகம் தூக்கு !
மீசையை முறுக்கி மேலே ஏற்று !
விழித்த விழியில் மேதினிக் கொளி செய் !
நகைப்பை முழக்கு ! நடத்து லோகத்தை !
உன் விடு - உனது பக்கத்து வீட்டின்
இடையில் வைத்த சுவரை இடித்து
வீதிகள் இடையில் திரையை விலக்கி
நட்டொடு நாட்டை இணைத்து மேலே
ஏறு ! வானை இடிக்கும் மலைமேல்
ஏறி நின்று பாரடா எங்கும் ;
எங்கும் பாரடா இப்புவி மக்களைப்பாரடா உணது மானிடப் பரப்பை !
பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம் !
'என்குலம்' என்றுனைத் தன்னிடம் ஒட்டியமக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சி கொள் !
அறிவை விரிவு செய் ; அகண்டமாக்கு !
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை !
அணைந்து கொள் ! உன்னைச் சங்கமமாக்கு ,
மானிட சமுத்திரம் நானென்று கூவு
பிரிவிலை எங்கும் பேத மில்லை
உலகம் உண்ண உண் ! உடுத்த உடுப்பாய் !
புகல்வேன் ; ' உடைமை மக்களுக்குப் பொது '
புவியை நடத்துப் பொதுவில் நடத்து !
வானைப் போல் மக்களைத் தாவும்
வெள்ளை அன்பால் இதனைக் -
குள்ள மனிதர்க்கும் கூறடா தோழனே !!
Labels: பாரதிதாசன்