திமுக-பாஜக வழங்கும் 'ராமன் கட்டிய பாலம்' அரட்டை அரங்கம்
மன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையில் ஆதாம் பாலம் என்றும் ராமன் பாலம் என்றும் அழைக்கப்படும், கடலுக்கடியில் கிடக்கும் மணல்திட்டுகளை வெட்டி எடுக்கும் பணி சேது சமுத்திரத் திட்டத்திற்காக ஆரம்பித்திருக்கும் இவ்வேளையில் பார்ப்பனர்கள் அனைவரும் ஒரே அணியில் இணைந்து கொண்டு 'ராமர் கட்டிய பாலத்தை இடிக்காதே!' என ஓலமிட ஆரம்பித்துள்ளனர்.
பாஜக, விஸ்வ இந்து பரிசத் போன்ற இந்து மதவெறிக் கூட்டத்துடன் சுப்பிரமணிய சாமியும், பார்ப்பன ஜெயலலிதாவும் அறிக்கை மேல் அறிக்கை விடுகின்றனர். பதிலுக்கு ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இருந்தும் பதில் அறிக்கை என லாவணிக்கச்சேரி களை கட்டி உள்ளது.
இந்த லாவணிக்கச்சேரியை ரசிப்பவர்கள் சில குறிப்பிட்ட விசயங்களை மறந்து விடும் செலக்டிவ் அம்னீசியா நோயாளிகளாகவே இருந்து விட்டால்தான் எவ்வளவு நல்லா இருக்கும்!
'வெடிகுண்டு வைத்து ராமர் பாலத்தைத் தகர்க்கப் போகின்றார்கள்' என இல.கணேசன் பீதியூட்டி 'தொன்மையான வரலாற்று சின்னமாகவும் மக்களின் நம்பிக்கைக்கு ஆதாரமாகவும் விளங்கும் பாலம்' என்று மணல்திட்டைக் காப்பாற்றத் துடிப்பதைக் கேட்பவர்கள், திட்டப்பணி நடைபெறும் பாதை எண்-6 வழியாக (ஆதாம் பாலம்) கால்வாய் வெட்டச் சொன்னதே முந்தைய பாஜக அரசின் திருநாவுக்கரசர் தலைமையிலான அமைச்சகம்தான் என்பதை மறக்க வேண்டும்.
பாராளுமன்றத்தில் பாஜகவின் மல்ஹோத்ரா 'பாலத்தை இடித்தால் அரசு கவிழ்ந்துவிடும்' என சாபமிட்டபோது டி.ஆர்.பாலு முழங்கினாரே '400 ஆண்டு காலப் பழைமை வாய்ந்த மசூதியை இடித்த நீங்கள் இப்போது இல்லாத பாலத்தை இடிப்பதாக என்மீது பழி போடுகிறீர்கள்' என்று! மசூதி இடித்த பின்னர்தான் தேஜகூ அரசில் இதே பாலு மந்திரியாய் இருந்து ஒரே குட்டையில் புரண்டார் என்பதை மறக்க வேண்டும்.
'ஆங்கிலேயர்கள் வரைந்த படங்களில்கூட ராமர் பாலம் இருந்தது. தற்போது இடிக்கப்படும் பாலத்தின் கற்களை இரகசியமாக கப்பலில் எடுத்துச் செல்கின்றனர். பிரதமரும் ஜனாதிபதியும் உடனே தலையிட வேண்டும்' என்று ஊளையிடும் ஜெயா மாமியின் அதிமுகதான் 2001 தேர்தல் அறிக்கையில் 'ஆதாம் பாலத்து மணலை அகற்றி கால்வாய் அமைக்கப்படும்' என்று சொன்னதென்பதை மறக்க வேண்டும்.
இந்த வாதப்பிரதிவாதத்தில் கருணாநிதி 'அயோத்தியில் ராமர் கோவில் என்று சொல்லி பாபர் மசூதியை இடித்து அதன் காரணமாக ரத்த ஆறு ஓடக் காரணமானவர்கள்'தான் சேதுக்கால்வாயை எதிர்க்கிறார்கள் எனச் சாடினார். அதே மதவெறியர்கள் 2002ல் குஜராத் முஸ்லிம்களை மாதக்கணக்கில் கொன்று போட்டபோது 'அது உள் மாநிலப்பிரச்சினை' என்று அவர் சொன்னதை மறக்க வேண்டும்.
இந்த அரட்டைகளைக் காது கொடுத்துக் கேட்பபவர்கள் இந்த அறிக்கைப்புலிகளைக் கேள்வி எதுவும் கேட்கப் போவதில்லைதான்.
தயானந்த சரஸ்வதி எனும் பண்டாரம் 'ராமேஸ்வரம் கடல் பகுதியில் உள்ளது இயற்கையான பாலமல்ல. கி.பி. 15 ஆம் நூற்றாண்டு வரை அப்பாலத்தில் மக்கள் சென்று வந்தனர்' என்று சொல்கிறார். 'அப்படியென்றால் 11ஆம் நூற்றாண்டில் ராஜராஜ சோழன் ஏன் அப்பாலத்தைப் பயன்படுத்தாமல் கடற்படையை ஏவி ஈழம் வென்றான்?' என்று அவரை யாரும் கேட்கப் போவதில்லை.
'பலகோடி இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் ராமர் பாலத்தை இடிப்பதை மைய அரசு செய்யக்கூடாது. சேதுக்கால்வாயால் வெளி நாட்டவருக்குதான் அதிகப்பலன்' என்று திடீர் தேசப்பற்றை விதைக்கும் விஷ்வ இந்து பரிசத், தனக்கு நன்கொடைகளை அமெரிக்கா, பிரிட்டனில் இருந்து ஏன் பெறுகின்றது? என யாரும் கேட்கப்போவதில்லை.
சேதுக்கால்வாய்க்காக வாதாடுவதற்கென்றே திமுக,மதிமுக,அதிமுக,திமுக, மீண்டும் மதிமுக எனப் பலமுறை கட்சி மாறிய மதிமுக அறிவுஜீவி கே.எஸ்.ராதாகிருஷ்ணனிடம் 'ஜெயாவின் சேதுக்கால்வாய் எதிர்ப்பு' பற்றி யாரும் கருத்து கேட்கப் போவதில்லை.
சொல்லி வைத்த மாதிரி எல்லோரும் 'அமெரிக்காவின் நாசாவே வெளியிட்டிருக்கும் செயற்கைக்கோள் படத்தில் ராமர் பாலம் இருக்கிறது' என்கிறார்கள். அவர்களிடம் 'நாசாவின் இணைய தளமோ, கடலில் நடக்கும் இயற்கை மாற்றத்தால் உண்டான மணல்திட்டுக்களே அவை. அங்கு மனிதனால் உருவாக்கப்பட்ட எவ்விதமான கட்டிடங்களும் இல்லை' எனச் சொன்னதையும், 'நாசா சொன்ன மணல் திட்டுக்களைப் பாலம் எனத் திரித்தவர்கள் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர்தானே!' என்பதையும் யாரும் கேட்கப் போவதில்லை.
ராமர் பாலம் கட்டினாரா? அது பாக் நீரிணைப்பில் (இலங்கை-இந்தியாவைப் பிரிக்கும் நீர்ச்சந்தி)தான் உள்ளதா? என்ற விவாதம் இல.கணேசனுக்கும் திமுகவுக்கும் இடையே நடந்து வருகிறது.
'மொகலாயர் காலத்து நூல்களிலும், தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள எண்ணற்ற நூல்களிலும் ராமர் கட்டிய பாலத்துக்கு ஆதாரம் உள்ளது' என இல கணேசன் சொல்லவே, டி.ஆர். பாலு சரஸ்வதி மகால் நூலகத்திற்கு சென்று 4 மணி நேரம் குறிப்பெடுத்தார். பெரியாரை ரவிக்குமார் தொடர்ந்து அவதூறு செய்து வந்தபோது கூட திமுக காரர்கள், அதற்கு மறுப்பு சொல்ல 4 மணிநேரம் பெரியார் நூல்களைத் தேடி இருக்க மாட்டார்கள். உடனே 'நூலகத்தில் நுழைந்து ஆதாரங்களை அழித்தார்' என்று பாசிச ஜெயா சொன்னார். அதையே பாஜகவும் வாந்தி எடுத்தது. பாராளுமன்றத்தில் 'பாலத்தை இதிகாச ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் வாதாடத் தயார்' எனப் பாலு அறிவித்ததும், ஆதாரப்புளுகுகளை நிறுத்தி விட்டு பாஜக 'இது இந்துக்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விசயம்' எனச் சொல்ல ஆரம்பித்தது.
இதையெல்லாம் காது குளிரக் கேட்ட பிறகு ராமன் கட்டிய பாலம் குறித்து நமது மண்டைக்குள்ளும் சில கேள்விகள் எழுகின்றன.
ராமனே கட்டிய பாலம் என்கிறார்களே! அவன் கட்டியது உண்மை என்றே கொண்டாலும் ஆனானப்பட்ட ராமன் கட்டிய பாலத்தையும் கடல் விழுங்கி விட்டதே.. அதை ஏன் இப்போது இடிக்கக் கூடாது?
தமிழக மக்களின் சிரமத்தைக் குறைத்துப் போக்குவரத்தை மேம்படுத்தவா ராமன் பாலம் கட்டினான்? மாற்றானிடம் சென்று விட்ட அல்லது கடத்தப்பட்ட தன் பெண்டாட்டியை மீண்டும் அழைத்து வரத்தானே அந்தப் பாலத்தைக் கட்டினான்?
இலங்கைக்கு செல்ல, கடலைக் கடக்க பாலம் கட்டிய ராமன், பாம்பனில் இருந்து ராமேஸ்வரம் வரை எப்படிப் போனான்?
ராமன் கட்டிய பாலம் தனுஷ்கோடியில் இருக்கையில் அனுமன் பறக்கையில் கீழே விழுந்ததால் உருவானதாகச் சொல்லப்படும் மருத்துவ மலை மட்டும் ஏன் கன்னியாகுமரிக்கருகில் இருக்கிறது?
'ராமன் பாலத்துக்கு 15 லட்சம் வருச வரலாறுண்டு' என்று ஜெ.யும் பாஜகவும் சொல்கிறார்கள். மனித இனம் உருவாகியே 5 லட்சம் ஆண்டுகள்தானே ஆகின்றன.
ராமன் பாலத்தை உடைப்பது குறித்துக் குதிக்கும் ராம.கோபாலன் கிராமங்களில் இன்னமும் இருக்கும் ரெட்டை டம்ளர்களை உடைக்க எப்போது வருவார்?
ராமநாதபுரம் மாவட்டத்திலே மலைகள் ஏதும் இல்லையே. பாலம் கட்ட பெரும்பாறைகளுக்கு ராமன் என்ன செய்தான்? கரசேவை நடத்திக் கல் வரவழைக்க அன்றைக்கு அத்வானி போன்றவர்கள் இல்லையே!
இவ்வளவு பழமையான பாலத்தைக் காக்க ஏன் இவர்கள் ஆண்ட 6 ஆண்டுகளில் தொல்பொருள் சின்னமாக அதனை அறிவிக்கவில்லை? உமாபாரதி சுரங்கத்துறை அமைச்சராக இருந்தபோது அப்பகுதியில் 21 மீட்டர் வரை தோண்டிப்பார்த்தும் கட்டிடங்கள் ஏதும் தென்படாததாலா?
உண்மையில் பாக் நீரிணைப்பில் பாலம் இருந்ததா? கடலியலாளர் ஜெயகரன் "நூறாண்டுகளுக்கு 1 மீட்டர் வரை கடல் மட்டம் உயர்ந்து வருவதால் 5000 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாட்டுடன் தரையால் இணைக்கப்பட்டிருந்த இலங்கை தீவாகிப் போனது" என்பதைப் பல ஆதாரங்களுடன் சொல்கிறார். (ஆதாரம்:- 'குமரி நில நீட்சி' ஜெயகரன்)
லட்சக்கணக்கான வருசங்கள் என்ன, 5000 வருசத்துக்கு முன்னர் வெறும் தரையில் நடந்தே போய்விடக்கூடிய இடத்துக்கு பாலம் கட்டப்பட்டது என்றால் ஒன்று கட்டியவன் கூமுட்டை. இதை நம்புபவன் கேணை.
இத்திட்டத்தை மதக்காரணம் காட்டி எதிர்ப்பவர்களை காங்கிரசின் கிருஷ்ணசாமி 'தமிழகத்தின் துரோகிகள்' என்றால் கருணாநிதியோ 'தேசத்துரோகிகள்' என்கிறார்.
கருணாநிதி எரிந்து விழுகிற மாதிரி பாஜக உண்மையிலேயே இத்திட்டத்தை எதிர்க்கிறதா? என்றால் இல்லவே இல்லை. அவர்கள் 5000 வருடங்களுக்கு முன்னர் ராமன் கட்டிய பாலத்தை இடிப்பதை மட்டுமே எதிர்க்கின்றார்களே தவிர சேதுக்கால்வாயை எதிர்க்கவில்லை. 'எண்ணெய் தடவாமல் தலை சீவ முடியுமா?' எனக் கருணாநிதி கேட்டால் 'எண்ணெய் தடவாமலே தலை சீவுவதுதான் ·பேசன்' என்று இல.கணேசன், மாற்று வழியில் தோண்டச் சொல்கிறார்.
எதிர்முகாமில் இருந்து எதிர்ப்பு வருவதைக்கண்ட கருணாநிதி தன் கூட்டணியை வைத்தே 'சேது சமுத்திரத்திட்டப் பாதுகாப்புக்குழு' ஒன்றை உருவாக்கி, 'சேதுக்கால்வாய் போன்றவற்றை நிறைவேற்றவே திமுக தனிநாடு கேட்டதாகவும், மய்ய அரசே என்னென்ன வேண்டும் சொல்லுங்கள் எனக்கேட்டதும் தனிநாடு கொள்கையைக் கைவிட்டு இந்தியாவில் இருந்து கொண்டே சேதுக்கால்வாய் வெட்டலாமென்று பிரிவினையைக் கைவிட்டதாகவும்' புத்தம் புது திரைக்கதை ஒன்றைச் சொன்னார்.
ராமதாசோ 'இத்திட்டம் நிறைவேற்றி முடிக்கப்பட்டால் தமிழகத்தில் தொழில்வளம் பெருகும். வணிகம் வளர்ச்சி அடையும். பல துறைமுகங்கள் ஏற்பட்டு வேலை வாய்ப்புகள் பெருகும்' என்று கற்பனையைத் தூண்டிவிடுகிறார். மார்க்சிஸ்ட் கட்சியின் சீத்தாராம் யெச்சூரியோ சிறந்ததொரு தரகு முதலாளியின் வார்த்தைகளிலேயே 'உலக அளவில் கப்பல் போக்குவரத்தில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இத்துறையில் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் முன்னேற வேண்டும் என்றால் இது போன்ற திட்டங்கள் அவசியம்' என்கிறார்.
துறைமுகங்கள் வளருவதால் வேலை வாய்ப்பு பெருகும் என்பது கடைந்தெடுத்த பொய்யாகும். சேதுக்கால்வாய் திட்டம் வருவதற்கு முன்னரே 80களில் தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை செய்து வந்த ஆயிரக்கணக்கான டி.எஸ்.ஏ. தொழிலாளர்களை துறைமுக நவீனமயமாக்கம் இன்று வீதிக்கு எறிந்து விட்டது. துறைமுகங்கள் முழுக்க கணிணிகளால் இயக்கப்படுகின்றன. 1990 களுக்குப் பின்னர் பின்பற்றப்படும் மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கையால் பல லட்சம் சிறுதொழில்கள் அழிந்து விட்டன. கிராமங்களின் கைவினைஞர்களும், விவசாயிகளும் பெருநகரங்களை நோக்கி படையெடுக்கின்றனர்.
சேது சமுத்திரத் திட்டத்தை ஆதரிக்கும் கருணாநிதி, 'நாற்கர சாலைகள் போட்ட பின்னர் 2 மணி நேரத்திலேயே சென்னையில் இருந்து வேலூருக்கு போக முடிகிறது. முன்பெல்லாம் 4 மணி நேரம் ஆனது' என்று சொல்கிறார். வெள்ளைக்காரன் ரயில் விட்ட கதை மாதிரிதான் இதுவும். காலனி நாடுகளில் இருந்து சுரண்டப்படும் செல்வத்தை விரைந்து எடுத்துச் செல்லவும் தனது படைகளை விரைவாக நகர்த்தவும் போட்ட இருப்புப்பாதையை சும்மா போட்டு வைக்காமல் மக்களுக்கும் பயன்படுத்தச் சொன்னான், வெள்ளைக்காரன். இன்று துறைமுகங்களை சிறப்புப் பொருளாதார மண்டலங்களுடன் நான்கு வழிச்சாலைகள் மூலம் இணைத்து அதிவேகமாக சரக்கைக் கையாள உலக வங்கி நிதியுடன் போடப்படும் சாலையையே ஏதோ மக்கள் விரைந்து செல்லப் போட்டது போலப் படம் காட்டுகிறார் கருணாநிதி.
சேது சமுத்திரத் திட்டத்தை ஜனநாயக முற்போக்குக் கூட்டணி ஆதரித்தால், 'வேறு இடத்தில் வெட்டுங்களேன்' என்று அதை எதிர்க்கிற மாதிரி பாஜகவும் ஜெயலலிதாவும் ஆதரிக்கின்றனர் . இதனை 'தமிழனின் கனவுத் திட்டம்' என்று சொல்லிடும் கால்வாய்க் கனவையே பிரிட்டிஷ் காரன் தான் உருவாக்கினான். 1860களில் பஞ்சங்களை உருவாக்கிய வெள்ளை ஏகாதிபத்தியம் பருத்தி,அவுரி போன்றவற்றையும் தேக்கு போன்ற மரங்களையும் விரைவாய்க் கொண்டு செல்ல வடிவமைத்த திட்டத்தை 'தமிழனின் கனவு'த் திட்டம் என்று சொல்வதே அடிமைப்புத்தியாகும். அன்று பிரிட்டனால் நிறைவேற்ற முடியாமல் போன இந்தத் திட்டத்தை,இன்று உலக நிதி மூலதனம் நிறைவேற்றக் கிளம்பியுள்ளது.
இத்திட்டத்தின் ஆதரவாளர்கள் 'சேதுவால் நம்நாடு மட்டுமல்ல. தென் கிழக்காசிய நாடுகளும் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள நாடுகளும் பயன்பெறும். வணிகமும் தொழிலும் பெருகும். அன்னிய முதலீடு அதிகரிக்கும். அந்நியச் செலாவணி அதிகரிக்கும். ஏற்றுமதி அதிகரிக்கும். துறைமுகங்களின் சரக்குக் கையாளும் திறன் அதிகரிக்கும்' என்று சேதுவின் உண்மை நோக்கத்தை சொல்லிவிடுகிறார்கள். சென்னைக்கு அருகில் ஹோண்டாவும், ஹ¥ண்டாயும் பல கோடி அந்நிய முதலீட்டில்தான் வந்தன. எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது? அவர்கள் கார்களை ஒருங்கிணைத்து சென்னை துறைமுகம் மூலமாகத்தான் ஏற்றுமதி செய்கின்றனர். இதன் மூலம் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு பெருகியுள்ளதா? இல்லவே இல்லை.
அந்நிய முதலீடுகளை வரவேற்க எனச் சாலைகளை அகலப்படுத்துவதற்காக பலரின் வீடுகள், கடைகள் தரைமட்டமாக்கப்பட்டதுதான் மிச்சம். ஜார்க்கண்ட், ஒரிஸ்ஸா,சத்திஸ்கர் முதல் பல மாநிலங்களின் சுரங்கங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப்பட்டு வருகின்றன. வெட்டி எடுக்கும் தாதுக்களையும் சிறப்புப் பொருளாதார மண்டல உற்பத்திப் பொருட்களையும் அதிவிரைவாக எடுத்துக் கொண்டு துறைமுகங்களை நோக்கிக் கொண்டு செல்லத்தான் நான்கு வழிச்சாலைகள் போடப்பட்டு வருகின்றன. இந்தப் பூதாகரமான சாலை விரிவாக்கத்தினால் பல இடங்களில் சிற்றூர்களின் பல தெருக்களே அழிக்கப்பட்டு விட்டன. பல்லாண்டு பழைமையான மரங்கள் பெயர்த்தெறியப்பட்டு விட்டன.
உலகில் அருகி வரும் கடல் ஆமைகள் முட்டையிடும் பகுதி என்றும் பவளப்பாறைகள் செறிந்த பகுதி என்றும் உயிரியலாளர்களால் போற்றப்படும் மன்னார் வளைகுடாவை ஏகாதிபத்தியம் சேதுக்கால்வாய் திட்டத்தின் மூலம் தனது கோரப்பசிக்குப் பலியாக்கி வருகின்றது. ஏகாதிபத்தியத்திற்காகப் போடப்படும் சேதுக்கால்வாயின் மைய நோக்கத்தைப் பற்றி யாரும் யோசிக்க விடாமல் இருக்க ஓட்டுக்கட்சிகள் 'ராமன் பாலம் கட்டினானா?' இல்லையா? என்ற பட்டிமன்றத்தில் இறங்கி விட்டன. 15 ஆண்டுகளுக்கு முன் பாபர், ராமர் கோவிலை இடித்தாரா இல்லையா என்ற விவாதத்தில் மக்களை மோதவிட்டு, ஆட்சியாளர்கள் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதே தந்திரம்தான் இன்று பாலப் பிரச்சினையிலும் பின்பற்றப்படுகின்றது.
ஓட்டுக்கட்சிகளின் திசைதிருப்பும் இந்த உத்திக்குப் பலியாகாமல் சேது சமுத்திரத்திட்டம் மூலம் நம் மண்ணை ஆதிக்கம் செய்யப்போகும் ஏகாதிபத்தியத்தை நாம் எதிர்த்துப் போராடுவோம்.
Labels: ஒட்டுக்கட்சிகள், மறுகாலனியாதிக்கம்