Tuesday, September 11, 2007

ஊரும், சேரியும் தனித்தனி - மனுதர்மம்....................! சென்னையும், செம்மஞ்சேரியும் பிரி பிரி - ஏகாதிபத்தியம் !!

உலக வங்கி வழங்கும் புதிய மனுநீதி.

சென்னை மாநகரம் விழித்தெழும் முன்பே விழித்தெழிந்து இயங்கத் தொடங்கும் கூறு கட்டிக் காய்கறி விற்பவர்கள், வீட்டுக்கு வீடு பால் பாக்கெட் போடுபவர்கள், நடுத்தர, மேட்டுக்குடி கனவான்களின் வீட்டு பத்துப்பாத்திரங்களையும் பளிங்குத்தரையையும் சுத்தம் செய்பவர்கள், மாநகரின் வனப்பை செதுக்கித் தரும் கொத்தனார்கள், சித்தாள்கள், மண்டல வாரியாக குப்பை அகற்றுபவர்கள், அடைத்து நாறும் பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்பவர்கள் என லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் இயக்கம் இல்லை என்றால் சென்னை மாநகரமே இல்லை எனலாம்.
..
உடலை உருக்கிப்போடும் கடின உழைப்பை ஈயும் இவர்களில் பலருக்கும் நல்ல உணவில்லை. இருக்க நல்ல இடமில்லை. வாடகை கொடுத்துக் கட்டுபடியாகும் நிலையில் வருமானம் இல்லை. எனவேதான் இவர்களில் பலரும் குடியிருப்பது குடிசைகளில். கழிப்பறை, குழியலறை இல்லாத, காலை நீட்டிக்கூட தூங்க முடியாத, கொசுப்படை தாக்குதலுக்குள் முடங்கிட இவர்களுக்குக் கிடைத்தவையோ பக்கிங்காம் கால்வாய், அடையாறு, கூவம் போன்ற நீர்வழிகளின் கரையோரங்கள்தான்.


நகருக்குள் கிடைக்கும் வேலைகளை-அதுவும் நிச்சயமில்லாத வேலையை- நம்பித்தான் இவர்களின் அன்றாடக் காலைப்பொழுதுகள் விடிகின்றன. இக்குடிசைவாசிகளில் 86 சதவீதம் பேருக்கு ஒருநாளைக்கு ஒருவேளைதான் உணவு. போதிய வருமானம் இல்லாததால் குடிசைவாழ் பெண்களின் உணவில் சத்து குறைந்து அவர்களில் 44 சதம் பேருக்கு இரத்த சோகை உள்ளது. இருப்பினும் எண்சாண் வயிறை நம்பி வாழவே தகுதியில்லாத குடிசைகளில் குடியிருப்பதால்தான் இவர்களுக்கு குடிசைகளை ஒட்டிய நாகரீகக் குடியிருப்புகளில் வீட்டு வேலைகளோ, குப்பை அள்ளுவதோ, கட்டிட வேலைகளோ கிடைக்கின்றன.

அதேபோல்தான் மெரீனா கடற்கரை, சாந்தோம் கடற்கரையை ஒட்டிக் குடியிருக்கும் மீனவர்களின் குடியிருப்புக்களும். மீன் பிடிக்கப் பயன்படும் வலைகள், கட்டுமரங்களை எளிதில் கடலுக்குள் கொண்டு செல்லவும், வலைகளை உலர்த்தவும், விரைவில் தொழிலுக்குச் செல்லவும் எனத் தேவையை ஒட்டிப் பல நூற்றாண்டுகளாக அவ்விடங்களில் மீனவர்கள் பாரம்பரியமாகக் குடியிருந்து வருகின்றனர்.

நிச்சயமில்லாத இந்த வாழ்க்கையிலும் மண்ணை அள்ளிப் போட வந்துள்ளது, சென்னை-2026 எனச் சொல்லப்படும் மாஸ்டர் பிளான் திட்டம்.

குடிசைவாசிகள் வாழத்தகாத இடங்களில் வாழ்கிறார்கள் என்று சொல்லி, அதனால் அவர்களை சென்னையில் இருந்து அகற்றி மாநகர எல்லைக்கு வெளியே செம்மண்சேரிக்கு விரட்டத் திட்டமிட்டுள்ளனர்.

இம்மக்களால்தான் சென்னையின் நீர்நிலைகள் மாசுபடுவதாகவும், அவர்கள் நகரின் வளர்ச்சித் திட்டங்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் மாஸ்டர் பிளான் குற்றம் சாட்டுகிறது.

கழிப்பறைகள் இல்லாத குடிசைமக்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதால் நகரின் சுகாதாரமே கெடுவதாயும் குற்றம் சாட்டுகிறது.

நீர்நிலைகளை மாசுபடுத்துவதாகக் குற்றம் சாட்டி சென்னையை விட்டுத் துரத்த வேண்டும் என்றால் முதலில் துரத்த வேண்டியவர்கள், லட்சக்கணக்கான லிட்டர் கழிவை சுத்திகரிக்காமல் வெளியேற்றும் டைடல் பார்க் உள்ளிட்ட பல பன்னாட்டு சாப்ட்வேர் நிறுவனங்களும், நட்சத்திர விடுதிகளும்தான். மூன்று நாளைக்கு ஒருமுறை வரும் நீரை சிக்கனமாக செலவளிக்கும் குடிசைகளால் நீர்நிலை கெடுகின்றது என்பதை குடிசைகளைப் பற்றி அறிந்த எவருமே நம்ப மாட்டார்கள்.

பின் எதற்காக குடிசைகளைக் காலி செய்யச் சொல்லுகிறார்கள்?

மாஸ்டர் பிளானிலேயே இதற்கான காரணம் தெளிவாக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுப்பயணிகளின் கண்களுக்கு இக்குடிசைகள் வெறுப்பை உண்டுபண்ணுகின்றனவாம்.

வளர்ந்து வரும் சென்னையை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தகுந்த வண்ணம் மாற்றி அமைக்க உருவாக்கப்பட்ட திட்டம்தான் மாஸ்டர் பிளான். இதனை டாக்டர் கலைஞரோ,புரட்சித் தலைவியோ சிந்தித்து உருவாக்கவில்லை.
உலக வங்கி எனப்படும் அமெரிக்க நிறுவனம் உருவாக்கி, அதற்கு எது எதெல்லாம் இடைஞ்சலாய் உள்ளதோ அவற்றை எல்லாம் தான் உருவாக்க இருக்கும் நவீன சிங்காரச் சென்னையை விட்டு அப்புறப்படுத்தச் சொல்லி கட்டளை இடுகிறது. இந்த திட்டத்திற்கு அது கடனாக வழங்கி இருக்கும் தொகை மட்டும் ரூபாய் 25 ஆயிரம் கோடிகள்.

இனிமேல் சென்னைக்குள் மாவரைக்கும் ஆலைகளோ, ஆடு மாடு வளர்ப்போ, குடிசைகளோ, மீனவர்களின் கட்டு மரங்களோ, சென்னை கடற்கரையின் பலூன், சோளக்கதிர் கடைகளோ இருக்கக் கூடாது. வெளியேறுங்கள் எனக் கட்டளை இட்டுள்ளது, உலக வங்கி. அதனை இந்த அரசு நிறைவேற்றுகிறது. சென்னையின் குடிசை மக்களில் 75 ஆயிரம் பேரை செம்மண்சேரிக்கு அப்பால் குடியேற்றப் போகின்றனர். ஏற்கெனவே அடையாறு நதிக்கரை ஓரக் குடியிருப்புக்களை புல்டோசர்களால் தரை மட்டமாக்கி 1500 குடும்பங்களை இடம் பெயரச் செய்தும் விட்டனர். 7300 பேருக்கு வெளியேற்ற நோட்டீசு வழங்கி விட்டனர். படிப்படியாக அனைத்து குடிசைவாசிகளையும் துரத்தி விட்டு சென்னையை அழகுபடுத்தப் போகிறார்களாம்.

குடிசைகளை அகற்றச் சொல்லும் அரசால், அதே குடிசைகளை இருக்கும் இடங்களிலேயே காங்கிரீட்டுகளாகக் கட்டித்தர இயலாதா?அடையாறு பூங்கா எனும் ஊதாரித் திட்டத்துக்கு மட்டும் ரூபாய் 100 கோடி ஒதுக்க இயலுகிற அரசால் குடிசைகளை மேம்படுத்த இயலாதா?


போலீசுக்காரர்களுக்கு மட்டும் பளபளப்பான அடுக்கு மாடிக்குடியிருப்புகள் கட்டும் அரசுக்கு குடிசைகளை நகருக்குள்ளேயே நவீனமாக்கித்தர வக்கில்லையா?

திறந்த வெளியில் மலம் கழித்து நோயைப் பரப்புகிறதாய் குடிசை மக்கள் மீது குற்றம் சாட்டும் சென்னை மாநகராட்சி ஏன் இதுவரை போதிய அளவில் கழிவறைகளைக் குடிசை மக்களுக்குக் கட்டித் தரவில்லை?

பொதுக்கிணறு, குளங்களை தலித்களுக்கு மறுத்து விட்டு தலித்களை சுத்தமற்றவர்கள் எனக் கூறும் பார்ப்பனீய வஞ்சகத்துக்கும் இதற்கும் என்ன வேறுபாடு?

அங்கீகாரம் பெறாமல் விதிகளை மீறி கோடிக்கணக்கில் கட்டிடம் கட்டியவன் கூட உள்ளே இருக்கலாம். உழைக்காமல் தரகு வேலை பார்ப்பவன் உள்ளே இருக்கலாம். முழுக்க முழுக்க அந்நிய நாட்டுக்கு சேவை செய்யும் நிறுவனங்கள் உள்ளே இருக்கலாம். ஆனால் இந்த மாநகரின் மைய நரம்பாய் உழைக்கின்ற குடிசைவாசிகள் மட்டும் நகருக்குள்ளே இருக்கக் கூடாதா?

செம்மண் சேரியில் இருந்து பிழைப்பு தேடி சென்னை வருவதும் இனி சுலபமில்லை எனும்படிக்கு, மாநகரப் பேருந்துகளைக் கூட மாற்றி அமைத்து வருகின்றனர். 4ரூபாய் கொடுத்து பயணம் செய்த வெள்ளைப் பலகை (ஒயிட் போர்டு) பேருந்துகளைக் குறைத்து அதே தடங்களில் சொகுசுப் பேருந்துகளை விட்டு 11 ரூபாய் வரை கொள்ளை அடிக்கத் தொடங்கி விட்டது, அரசு. ஆக, செம்மண் சேரியில் இருந்து தினமும் பயணித்து, கிடைக்கப் போகும் கொஞ்ச நஞ்ச ஊதியத்தையும் வழிப்பறி செய்யப் போகிறது அரசு.

இக்கொடுமைகளை அடுத்து வரும் அரசு தீர்த்து விடும் என்றோ, அல்லது வேறு ஏதாவது ஓட்டுக் கட்சி இதனைப் போராடிப் பின் வாங்க வைக்கும் என்றோ நம்ப இடமில்லை.

உலக வங்கியின் கட்டளைப்படி ஆடுபவர்கள்தான் கருணாநிதியும், ஜெயலலிதாவும். உலகவங்கி போட்டுத்தந்திருக்கும் மாஸ்டர்பிளானில் இச்சதித் திட்டம் பற்றிக் குறிப்பிட்டிருப்பது தெளிவாகத் தெரிந்திருந்தும் கேப்டன் முதல் ராமதாசு வரை, வலது இடது கம்யூனிஸ்ட்கள் முதல் பாஜக வரை எந்த ஓட்டுக் கட்சியாவது இந்த அநியாயத் திட்டத்தைக் கண்டித்திருக்கின்றதா?

25000 கோடிகள் வழங்கும் உலக வங்கியின் கட்டளைக்கெல்லாம் அடிபணியும் அரசு நமக்கு இனியும் தேவையா?

கிழக்கு கடற்கரை சாலை, ராஜீவ் காந்தி சாலை, பத்துக்கும் மேற்பட்ட மேம்பாலங்கள் என அனைத்திலும் உலக வங்கி கடனுதவி செய்து அதற்கான கப்பத்தை அள்ளிக்கொண்டு செல்கிறது.

மாஸ்டர்பிளானை மட்டும் தனியே எதிர்ப்பதனால் இச்சதியை முறியடித்திட இயலாது. உலகமயம்,தனியார் மயம், தாராளமயம் ஆகியவற்றின் துணையுடன் உலக வங்கி மூலமாக நம் நாடு காலனியாக்கப்பட்டு வருகிறது. காலனியாக்கத்தை எதிர்த்து விடுதலைப்போர் நடத்த வேண்டிய சூழலில் நாடு இன்றுள்ளது.

உழைக்கும் மக்களின் இருப்பிடங்கள் அகற்றப்படுவதை எதிர்த்து போராடவும், மாஸ்டர் பிளானைக் கைவிடவும்,பன்னாட்டுக் கம்பெனியின் கந்துவட்டி நிறுவனமான உலக வங்கியின் சதியில் இருந்து நம் மக்களையும் நாட்டையும் காப்பாற்றவும் உழைக்கும் மக்கள் அனைவரும் இணைந்து போராட வேண்டியதன் அவசியம் உருவாகி உள்ளது.
Related:..

Labels: , ,

Saturday, August 11, 2007

எங்க நாடு ஆகுது வல்லரசு அமெரிக்கா போலே...


இன்றைக்கு நாடு வல்லரசு ஆகிவருகிறது என்ற மாயயை ஒருபுறம் தோற்றுவித்துக்கொண்டே மறுபுறம் நாட்டை படுவேகமாக அந்நியனுக்கு விற்று வருகின்றார்கள் இந்த மக்கள் விரோத ஆட்சியாளர்கள்.

நாட்டை பகுதி பகுதியாக அந்நியனுக்கு சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் தாரை வார்க்கிறார்கள், இன்னொருபுறம் அனைத்து துறைகளிலும் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிச்சு உள்நாட்டு தொழில்களை நாசமாக்குகின்றனர்,அனுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் அமெரிக்கனுக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுக்கின்றனர்.

இதில் எந்த ஓட்டுக்கட்சிக்கும் கருத்துவேறுபாடு என்பதே கிடையாது.

உதாரணமாக தனியார்மய, தாராளமய, உலகமய கொள்கையினை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நடைமுறைப்படுத்த மாட்டோம், உலக வர்த்த கழகத்தில் இருந்து இந்தியா வெளியேறும் என்பது போன்ற வாக்குறுதிகளை எந்த ஓட்டுக்கட்சிக்கார்களும் சொல்வது கிடையாது.

இன்றைக்கு சிறப்பு பொருளாதார மண்டலத்தை எதிர்க்குறோம்; அனுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்குறோம்; ரிலையன்ஸை எதிர்க்குறோம் என சொல்கிற எவரும் இதற்கனைத்துக்கும் அடிப்படையான மேலே உள்ள விஷயத்தை பற்றி மூச்சு கூட விடுவதில்லை.

ஏன்னா இவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் இதையேதான் நடைமுறைப்படுத்த போகிறார்கள்.இப்பவே மற்ற மாநிலங்களிலும் தங்களுடைய கட்சி ஆட்சியிலும் இத்தகைய கொள்கைகள் தான் நடைமுறைப்படுத்துகிறது என்றும் இந்த ஓட்டுக்கட்சி ஆட்சியாளர்களுக்கு தெரியும்.

ஆக நாடு காலனியாக்கப்பட்டு வருவதில், காலனியாக்குவதில் காங்கிரஸ், பா.ஜ.க, போலி கம்யூனிஸ்டுகள், தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க, சரத்குமார் என அனைவருக்கும் முழு சம்பந்தம்.
..
இதை எப்படி ஆக்குவது என்பதில் தான் தங்களுக்குள் வேறுபடுகின்றனர்.
..
இப்படிப்பட்ட நிலையிலும் இன்னமும் நாடு முன்னேறுது என்று கூறுபவர்கள் மேலே உள்ள "இந்தியாவின் 83 கோடி பேரின் தினசரி வருமானம் ரூ 20" என்பதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்.
..
இனியும் இந்திய ஆட்சியாளர்கள் மற்றும் கலாம்களின் பேச்சை நம்பிக்கொண்டு கனவு காண முயல்வதற்கு எந்த அடிப்படையும் இல்லை.

போராடுவதை தவிர வேறு மாற்று இல்லை என முகத்தில் அறைந்து சொல்கிறது தினமும் வரும் செய்திகள்.
Related :
..

Labels: , ,

Tuesday, July 31, 2007

கல்வி கொடுக்க வக்கில்ல என்னடா கவுர்ன்மென்ட்டு !!

ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் பிறக்கவிருக்கிறது. 2007-08 ஆம் வருடத்திற்கான கல்வியாண்டு தொடங்கிவிட்டது. பள்ளிகளிலும் , கல்லூரிகளிலும் வகுப்புகள் தொடங்கப்பட்டுவிட்டது. பொறியியல் படிப்புக்கான அண்ணா பல்கலைக்கழக கவுன்சிலிங் தொடங்கி நடந்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் "இன்றைய கல்வி" பற்றி ஒரு பதிவு எழுதலாம் என்று முயற்சிக்கிறேன்.

கல்வி என்பது மனிதனைப் பண்படுத்துவது என்பார்கள். ஒன்றுமே தெரியாத வெற்றுக் களிமண்ணாய் பிறக்கும் மனிதனுக்கு இந்த உலகத்தையே அறிமுகப்படுத்தி அதன் தோற்றம் முதல் இன்றைக்கு வரை நிகழந்த மாற்றங்களை, அறிவியல் கண்டுபிடிப்புகளை கலை இலக்கியங்களைப் போதித்து அவனை புடம் போட்டு வார்த்து எடுப்பதோடு, இந்த சமூகத்தில் அவன் யார்? அவனது பங்கு என்ன? என்பதை அவனுக்கு உணர்த்த வேண்டிய முக்கிய கடமை கல்விக்கிருக்கிறது.

ஆனால் இன்றைய சூழ்நிலையில் நாம் கல்வியை அப்படிப் பார்ப்பதில்லை. வேலைக்கு போய்ச் சம்பாதிக்க ஒரு தகுதியாக மட்டுமே கல்வி உள்ளது. எந்தத் தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்ட முடியும் என்று கணக்கு பார்ப்பது போல , எந்தப் படிப்பில் முதலீடுபோட்டால் பையன் அதிகமாகச் சம்பாதிப்பான் என்று கணக்குப் போடுகிறார்கள் . அவர்களைச் சொல்லி குற்றமில்லை.
இன்றைக்கு எந்த பத்திரிக்கையை எடுத்தாலும் இந்த படிப்புப்படித்தால் இவ்வளவு சம்பளத்தில் வேலை, இந்தக் கல்லூரியில் படித்தால் படிப்பை முடிக்கும் முன்பே வேலை என்று பக்கத்திற்குப் பக்கம் எழுதித் தள்ளுகிறார்கள். டி.வி-யில் எல்லா சேனல்களிலும் கல்லூரிகளைப் படம்பிடித்து சுண்டி இழுக்கும் விளம்பரங்களை ஒளிபரப்புகிறார்கள். இதையெல்லாம் பார்த்து நமது பெற்றோரும் இந்தக் கல்லூரிகளின் வலையில் தங்களது பணத்துடன் போய் விழுகிறார்கள்.

இன்றைக்கு இருக்கும் நடுத்தர இளைஞர்கள் ஒவ்வொருவரும் எப்படியாவது ஒரு இஞ்சினியராக வேண்டும் என்றுதான் கனவு காண்கிறார்கள். "கனவு காணுங்கள்" என்று உற்சாகமூட்டும் முதன் குடிமகன் இருந்தபோது படித்தவர்களாயிற்றே, அவர்கள் வேறு என்ன செய்வார்கள். ஆனால் அவர்கள் கனவை நினைவாக்க அவர்களது பெற்றோர் மென்மேலும் கடன் பட வேண்டியிருப்பதை அவர்கள் உணரவில்லை. பள்ளிப்படிப்பிற்கே தங்களது சேமிப்பு முழுவதையும் கறைத்துவிட்டு , கடனாளியாக நிற்கும் நடுத்தர வர்க்கத்து பெற்றோர் கல்லூரிப் படிப்பிற்காக மகனையும் கடனாளியாக்க வேண்டியுள்ளது. நடுத்தர வர்க்கத்திற்காவது வங்கிகள் கடன் கொடுக்கின்றன. ஆனால் ஏழை எளிய மக்களுக்கு அதுவும் கிடையாது.

பொறியியல் படிப்பு படிக்கக் குறைந்தது 2 லட்சம் முதல் 8 லட்சம் வரை செலவாகிறது. 10 லட்சம் இருந்தால் யார் வேண்டுமானாலும் ஒரு டாக்டராகலாம். இப்படி லட்சங்களில்தான் இன்றைக்கு உயர்கல்வி உள்ளது. எந்தக் கல்லூரியை எடுத்துக் கொண்டாலும் அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தை விட இருமடங்கு வசூலிக்கின்றனர்.இவர்களை யாரும் தட்டிக் கேட்பதோ தண்டிப்பதோ கிடையாது.

தமிழகத்தில் மட்டும் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 4.5 லட்சம் பேர் பள்ளிப் படிப்பை முடித்து வருகின்றார்கள். இவர்களுக்கென தரமான கல்வியை வழங்க இருக்கும் அரசு கல்லூரிகள் மொத்தம் 67 (மருத்துவம், பொறியியல், கலை கல்லூரிகள் எல்லாம்) இவற்றில் வெறும் 25 ஆயிரம் பேர் மட்டுமே படிக்க இயலும். மீதமுள்ள 4.25 லட்சம் பேருக்கு கல்வி வழங்கும் பொறுப்பை அரசு தட்டிக்கழித்துவிட்டது. அதை தங்களது தலைமேல் சுமக்கப் பல கல்வித்தந்தைகள் காத்திருகின்றனர்.
தமிழகம் முழுவதும், மாவட்டம் தோறும் இந்தக் கல்வித்தந்தைகள் முளைத்து கொண்டே இருக்கின்றனர். இவர்களைச் சற்று அருகில் சென்று பார்த்தோமானால் எல்லோரும் சட்டவிரோத , தேசவிரோத கூட்டம் எனபது நன்றாகத் தெரியும்.

ஜேப்பியார், உடையார் போன்ற சாராய முதலைகள்; தம்பித்துரை, ஏ.சி.சண்முகம் போன்ற அரசியல் பெருச்சாளிகள்; விஜயகாந்த், ரஜினி போன்ற கழிசடை கதாநாயகர்கள்; மலையாளத்து அம்மா முதல் மேல் மருவத்து அம்மா வரையிலான ஆன்மிக கொள்ளையர்கள்; இன்னும் சிலைதிருடர்கள், கள்ளநோட்டு களவாணிகள், விபச்சார புரோக்கர்கள், கடத்தல் மன்னர்கள்; முன்னாள்-இந்நாள் கட்டப்பஞ்சாயத்து ரவுடிகள் என ஒரு பெரிய தேசதுரோகக் கூட்டமே கல்வித்தந்தைப் பட்டத்தைச் சூட்டிக்கொண்டு திரிகிறது. இவர்கள் அனைவரும் கருப்புப்பணத்தைப் புரட்டுவதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர்.
இவர்களை நம்பித்தான் நமது கல்வியை ஒப்படைத்துள்ளது இந்த அரசு. லாபம் தரும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்றுவிட்டு; வசூலிக்க வேண்டிய வரிப்பணத்தை பன்னாட்டு முதலாளிகளுக்கு வரிச்சலுகையாக அளித்துவிட்டு; செலவுக்கு பணமில்லையென்று சாராயம் காய்ச்சி விற்கும் கேடுகெட்ட இந்த அரசு, தன்னோடு சாராயம் காய்ச்சும் கூட்டாளியிடம் மக்களின் கல்வியை ஒப்படைத்திருப்பதில் அதிசியமில்லைதான். ஆனாலும் இவர்கள் ஏதோ கல்வியைத் தூக்கி நிறுத்திவிட்டதைப் போல காட்டிக்கொள்வதைதான் சகிக்கவில்லை.

இந்தக் கல்விக் கொள்ளையர்கள் அரசு நிர்ணயித்த கட்டணங்களை விட அதிகமாக வசூலிக்கும் போது, விதிமுறைகளை மீறி கல்லுரிகளை நடத்தும் போதும் , பாதிக்கப்படும் மாணவர்கள் தட்டிக்கேட்டால் அவர்களை ரவுடிகளைக் கொண்டு தாக்கும்போதும், இந்த அரசாங்கம் கண்டுகொள்வதே கிடையாது. ஏனென்றால் இன்றைக்கு ஆளும் வர்க்கமாய் உள்ள ஒவ்வொருவனுக்கும் ஒரு கல்லூரி இருக்கிறது. தமிழகத்தில் உள்ள எல்லாத் தனியார் கல்லூரிகளும் ஏதாவதொரு வடிவத்தில் இந்த ஆளும் வர்க்கத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இந்த கொள்ளையத் தடுப்பதற்கு பதில் அதனை வளரச் செய்கின்றனர்.

1950 ல் இந்தியா குடியரசு நாடு என அறிவிக்கப்பட்டபோது 10 வருடங்களில் 14 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் கல்வி கொடுபோம் என்று அறிவித்தார்கள். இன்றைக்கு 60 ஆண்டுகளுக்கு கிட்டே ஆகியும் இன்னமும் உலகின் எழுத்தறிவில்லாதவர்களில் 50 % பேர் இந்தியர்கள் என்று கூறுவது வெட்கக் கேடானது. இன்றைக்கு இந்தியாவில் 6-14 வயதுக்குக் கீழே உள்ள 20 கோடிக் குழந்தைகளில் கிட்டத்தட்ட 3 கோடிப்பேர் பள்ளிக்கு சென்றதில்லை. 6 1/2 கோடிப்பேர் 5-ம் வகுப்புடனும். 5 கோடிப்பேர் 7-ம் வகுப்புடனும் பள்ளியை விட்டு நின்றுவிடுகின்றனர்.

காங்கிரஸ், திமுக, அதிமுக, பா.ஜ.க, கம்யூனிஸ்டு ,பாமக, மதிமுக, தேமுதிக என மாற்றி மாற்றி யாருக்கு ஓட்டுப்போட்டாலும் இந்த நிலைமை மாறவில்லை, மாறாது. நம்மை விடச் சிறிய நாடான கியுபாவில் 10 ஆண்டுகளில் கல்லாமையை முற்றிலுமாக ஒழித்துவிட்டார்கள். நம்மால் முடியாதது அவர்களால் மட்டும் எப்படி முடிந்தது. அதற்குத் தேவை நாட்டுப்பற்றும்; மக்களின் மேல் உண்மையான அக்கறையும் கொண்ட ஒரு அரசு.

துப்பாக்கியை எடுத்துச் சென்று பாகிஸ்தானியரைச் சுடுவதை மட்டுமே நாட்டுப்பற்றாக போதிக்கும் இந்த அரசிடம் மக்களின் நலனை எதிர்பார்ப்பது முட்டாள்தனம், சொந்த லாபத்திற்காக நாட்டையே கூட்டிக் கொடுக்கும் அரசியல் வாதிகளிடம் நேர்மையை எதிர்பார்ப்பது மடத்தனம்.
அரசின் இந்தக் கல்விக் கொள்ளையை மட்டுமல்ல, இன்றைக்கு சமுதாயத்தில் இவர்கள் உருவாக்கிவரும் எல்லா பிரச்சினைக்கும் மூலகாரணமான தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற பொருளாதாரக் கொள்கையினை எதிர்த்துப் போராடுவது மட்டுமே புத்திசாலித்தனம்.

Labels: , ,

Monday, July 30, 2007

ஏகாதிபத்திய அடிமைகளே ! பொய்யுரை பதிவர்களே !!

நாட்டில் தொழிலாளர்கள், விவசாயிகள் என எல்லோரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள், வாழவழியற்று தற்கொலை பண்ணிக்கிறாங்க என்ற இன்றைய நிலையினை அறிய பெரிய விஷய ஞானமோ, அறிவோ தேவையா என்றால் இல்லை,தினசரி நாளிதழ்களை பார்த்தா கூட தெரிஞ்சுக்க முடியும்.
..
செய்தி என்கிற அடிப்படையில் எல்லாவற்றையும் எழுதுகிறார்கள். ஆனால் இதுக்கு என்ன காரணம் என்று ஒருத்தரும் எழுதுறது இல்லை. போலி எதிர்ப்பாளர்களான NGOக்கள் முதல் லேட்டஸ்ட் ஒட்டுக்கட்சிகள் வரை ஒருத்தரும் சொல்றதுல்ல.
..
இதில் பத்திரிக்கை, இணைய தளம், ப்ளாக்குகள் உள்பட்ட தளங்களை பற்றி தான் இந்த பதிவு.
..
பொதுவாக இவர்கள்
  • விவசாயிகள் தற்கொலையில இருந்து இன்றைக்கு 2ரூ அரிசி வாங்க கூட வழியற்று மக்கள் அவதிப்படுவது வரை எதுக்குமே யாருடைய பொருளாதார கொள்கை, அதனை இந்த ஆட்சியாளர்கள் நடைமுறைப்படுத்த நிர்ப்பந்திப்பது எது என எந்த அடிப்படை காரணத்தையும் எழுதுவது இல்லை.

இதுல பத்திரிக்கையினை முழுக்க லாபம் ஈட்டும் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.நாம என்ன தெரிஞ்சுக்கனும், படிக்கனும் என அனைத்தையும் இன்றைக்கு ஏகாதிபத்தியங்கள் மற்றும் அவர்களோட கைக்கூலிகள் தான் முடிவு செய்கிறார்கள்.

சரி அப்படி கூட செய்தியாக எல்லாவற்றையும் கொடுக்கிறார்களா என்றால் இல்லை. அதுலயும் அவர்களுக்கு பிரச்சினை என சிலவற்றை மறைத்து விடுகிறார்கள்......

இந்த அடிப்படையில் செய்திகளை கொடுத்துவிட்டு....கூடவே " நாடு வளர்ச்சி பாதையில் ஜெட் வேகத்துல போகுது" என்ற குடியரசு (மொம்மை) தலைவர் முதல் ஆட்சியாளர்கள் என அனைவரின் பேச்சுக்களையும் எழுதிகின்றனர்.

  • ஒருபுறம் 1 லட்சத்துகும் மேற்ப்பட்ட ஆசிரியர்கள் வேலையில்லாமல் இருக்கிறாங்க, இன்னொருபுறம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக கிடக்கிறது

  • பெப்சிக்கும் கொக்க கோலாவுக்கு பைசா கணக்கில் தன்ணீரை கொடுத்த மன்மோகன் சிங இன்னொருபுறம் நம்ம விவசயிகளுக்கு தண்ணீரோட அருமை தெரியலை, பணம் கொடுத்து வாங்கினால்தான் தெரியும் என பேசிகிறார்.

  • டாஸ்மாக் கடையில் ஆண்டுக்கு 7000 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஆனால் சுனாமிக்கு 3 ஆண்டுகளுகு பின்னும் உலகவங்கியிடம் 1000 கோடி கடனாக கேட்கிறது தமிழக அரசாங்கம்.

  • ஒருபுறம் பெப்சி குடிக்காதே, புகை குடிக்காதே, மது அருந்தாதே,டாடாவுக்கு எதிர்ப்பு , வாரிசு அரசியல் கூடாது என தனித்தனி அறிக்கை....மறுபுறம் அனைத்தையும் தடை செய்யும் அதிகாரம் உள்ள் மக்களையே சந்திக்காத மத்திய அமைச்சர் பதவியில் மகன், மத்திய, மாநில அரசுக்கு முழு ஆதரவு இதுதான் ராமதாஸ்

இப்படி முரண்பாடுகளை தனித்தனியாக இருப்பதை ஒன்றுபடுத்தி பார்க்கும் போதுதான் தெரியும், இன்று மக்கள் மீது இந்த அரசாங்கம் மறைமுகமாக ஒரு போரையே தொடுத்து வருகிறது என்று.

இதற்கிடையில் இந்த முரண்பாடுகளை எல்லாம் பொருத்தி

  • இன்றைக்கு நாட்டை படுவேகமாக அந்நியனுக்கு விற்றுக்கொண்டு இருக்கிறார்கள் இந்த மக்கள் நல (?) ஆட்சியாளர்கள் என்பதையும்
  • விவசாயிடம் இருந்து விவசாயம் பறிக்கப்பட்ட காலம் மாறி விவசாயத்திடம் இருந்தே விளைநிலம் பறிக்க பட்டு தொழிற்புரட்சி, வேலை வாய்ப்பு என்ற பேரில் அந்நியனுக்கு தாரை வார்க்கப் படுகிறது என்பது உள்பட

மக்களோட சகல கஷ்டங்கள் அனைத்துக்கும் என்ன காரண்ம், யார் காரணம் என்பதை தெரியப்படுத்த கூடிய பத்திரிக்கைகளும் இணையதளங்களும் உள்ளன. ப்ளாக்கர் உள்பட அனைத்து தளங்களிலும் போர்க்குரலாக ஒலிக்கிறது இது.

ஆனால் அடிமைத்தனத்திலேயே ஊறி திளைக்கின்ற சில அடிமைகள் ஆட்சியாளர்களோட முகமுடியாக செயல்பட முயற்சிக்கின்றன.

"நாட்டோட வளர்ச்சியை தடுக்குறாங்க, மேற்கு வங்காளத்தில் - பிற்போக்கு சக்திகள் ஒரு தொழிற்சாலை கூட வரவிடாமல் தடுத்து ரத்த ஆற்றை ஓட விட்டார்கள்; சும்மா 100 பேரை துண்டிவிட்டு; 100 பேருக்காக 10 ஆயிரம் பேருடைய வாய்ப்பு வசதிகளை குலைக்கின்றனர்" என்று இன்று ( 29 .7.07) டாடாவுக்கு 10 ஆயிரம் ஏக்கர் கொடுக்கிறதுக்கு எப்பவும் போல இது வளர்ச்சிக்குதான் என்ற அடிமுட்டாள்தனமான ஆட்சியாளர்களுடைய வாதத்தையே வைத்து கலைஞர் பேசியுள்ளார்.

நந்திகராம், சிங்கூர் போன்ற மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் போலி கம்யூனிஸ்ட்களின் குரலை இந்த முற்போக்கு பெரியார் சீடர் வெளிப்படுத்தி உள்ளார்.

இன்றைக்கு தனியார்மய, தாராளமய, உலகமயமாக்கல் என்ற கொள்ளையினை ஏற்றுக்கொள்வதா , வேண்டாமா என்பதல்ல இந்த மன்மோன் சிங்,அத்வானி,போலி கம்யூனிஸ்டுகள், கருணாநிதி,ஜெயலலிதா, ராமதாஸ், விஜயகாந்த் போன்றவர்களுடைய பிரச்சனை. இதை எப்படி நடைமுறைபடுத்துவது எனபது தான் இவர்களுக்கிடையே உள்ள வேறுபாடு.

இந்த சூழ்நிலையில் இவர்களோட முகமூடியாக சிலர் செயல்பட முயற்சிக்கின்றனர் .

உதாரணமாக தமிழகத்தில் இன்று டாடாவுக்கு 10 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தி தருவதற்கு அரசாங்கத்துக்கு ஒத்து ஊதக் கிளம்புகின்றனர்..

இதனை படிக்கும் அத்தகைய நபர்கள் மக்களநலனுக்கு எதிராக அவதூறாக எழுதுவதை கைவிட்டு - எழுதுவது; ஆரோக்கியமான ப்ளாகின் வளர்ச்சிக்கு உகந்ததாகும்.

நமக்கு தேவை சமச்சீரான வளர்ச்சி என்கிறதை புரிஞ்சிக்க முயற்சிப் பண்ணுங்க...

இல்லைன்னா
..
"வளர்ச்சி....முன்னேறுது.....அரசியல் படுத்துறாங்க.....என்று தனித்தனியாக எழுதி மக்களை முட்டாளாக்காம உங்களுடைய வாதத்தை உடைத்து எழுதும் பதிவுகளுக்கு மறுத்து விளக்கமாக உங்க பதிவை போட (?) முயற்சி பண்ணுங்க.... "
..
அதுவிட்டுட்டு சும்மா மக்கள் நலனோட விளையாடாதீங்க.
********************************************
********************************************
Related:
*********

Labels: ,

Friday, July 27, 2007

உலக வங்கியிடம் ஏன் கை ஏந்துகிறாய்?

1) உலக வங்கியிடம் சுனாமி நிவாரணத்துக்கு ரூ 1000 கோடி கடனாக தர வேண்டும் என கெஞ்சி கேட்டிருக்கிறார் தமிழக முதல்வர்.


2) தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் மூலம் கடந்த ஆண்டு வருமானம் ரூ 7000 கோடி.


டாஸ்மாக் கடை மூலம் இவ்வளவு வருமானம் வரும்போது உலகவங்கியிடம் கடன் கேட்பது எதற்காக?

அவ்வாறு பணம் வாங்கினால் வட்டி கட்டப்போவது யார்?

இந்த கடனுக்காக உலகவங்கி போட்ட உத்தரவுகள் என்னென்ன?

Labels: ,

Saturday, June 16, 2007

கார்பரேட் கட்சிகளும் மக்கள் நலனும்


இன்று இந்தியாவில் உள்ள அனைத்து ஒட்டுக் கட்சிகளும் நிறுவனமயமாக்கப்பட்டு விட்டன. அவற்றில் எது ஆட்சிக்கு வந்தாலும் இன்றைய உலக மக்கள் விரோதிகளான உலக வங்கி, உலக வர்ததக கழகத்தின் கைப்பாவையாக மட்டுமே செயற்படுகின்றன.

இந்தகட்சி கம்பெனிகளுக்குள் எந்த விதமான கொள்கை வேறுபாடும் இல்லை. எல்லோரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு நாட்டை காட்டிககொடுப்பதும், அதன் மூலம் தன்னையும் தன்னை ஆதர்¢க்கும் தரகு முதலாளிகளையும் வளப்படுத்திக்கொள்கின்றன. ஆனால் தாங்கள் ஆட்சியில் இல்லாத போதும், தனது இருப்புக்கு மக்களால் பங்கம் நேர்கின்ற போதும் இவற்றை எதிர்ப்பது போலக் காட்டுகின்றன. இந்த ஏமாற்று வேலையையே தனது் கொள்கைகளாக வைத்து இருக்கின்றன. ஆனால் மிகவும் சிரமப்பட்டு தங்களுக்குள் வேறுபாடு இருப்பது போல நடிக்கின்றன. மாறி மாறி இவர்களேதான் கூட்டணியாக ஆட்சிக்கு வந்துகொண்டு இருக்கிறார்கள், ஆனால் நாடு ஜெட் வேகத்தில் விற்கபடுவதில் எந்த தடங்கலும் இல்லை.

இந்த நாட்டு மக்களுக்கு உணவு மானியத்தை, வேளாண் மானியத்தை படிப்படியாக குறைத்து நிறுத்தவும் முயற்சி செய்கிறார்கள். தாய் மண்ணை விட்டுத்தர முடியாது என்று முஸ்லீம்களை கொல்கிறார்கள். ஆனால் விவசாயத்தை விட்டு - நிலத்தை விட்டு மக்களை வெளியேற்றுகிறார்கள். அதே நேரத்தில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பகுதி பகுதியாக தனி சாம்ராஜியம் (sez), வரிச்சலுகை, வசதிகள் என செய்து கொடுக்கிறார்கள்..

இப்படி நாட்டை தொடர்ந்து காட்டி கொடுத்து வருவதை (இதை முன்னேற்றம் என்று வேறு கூறுகிறார்கள்) மக்கள் எதிர்க்கும் முன் இவனே 2 ரூபாய் அரசி, இலவச கலர் டி..வி., ஒரு சிலருக்கு நிலம் என கொடுத்து, தான் அடிக்கும் கொள்ளையை மறைத்துவிடுகிறார்கள். இவர்களுடைய இந்தக் கொள்ளையினால் தான் நமது நாட்டின் நிலமை இப்படி இருக்கிறது என்பதை இதன் மூலம் மறைக்க முயல்கிறார்கள்.

மக்கள் முன்னேற்றதுக்கு மிகவும் முக்கியமான கல்வி, மருத்துவ வசதி, போன்ற அத்தியாவசியத் துறைகளை தனியாரிடம் கொடுத்து அதில் அவர்கள் கோடி கோடியாகச் சம்பாரிக்க வசதி செய்து கொடுத்து, காசிருந்தால்தான் கல்வி மருத்துவம் எல்லாம் என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள். மக்களை குடிக்கு அடிமைப்படுத்தி மந்தைகளாக மாற்றி போராடும் குணத்தை மழுங்கடிப்பதற்க்காக அரசே மதுக்கடைகளை (டாஸ்மார்க்) நடத்தும் அவலம் தமிழகத்தில் இருக்கிறது.

இது தமிழ்நாட்டில் மட்டும் நிகழ்ந்ததல்ல, திராவிட கட்சிகள் மட்டும் இதனைச் செய்யவில்லை, இந்தியா முழுவதும், அனைத்து ஓட்டுக் கட்சிகளும் , கட்சிப் பாகுபாடின்றி 50 வருடங்களுக்கும் மேலாக மாறி மாறி ஆட்சிக்கு வந்து இதையேதான் செய்கின்றன.
இந்த கார்ப்ரெட் கட்சிகள் சிலவற்றின் செயல்கள், பேச்சுக்கள், யோக்கியதைகளை பார்க்கும்போது இவர்கள் எப்படியெல்லம் மக்களை ஏமாளிகளாக நினைத்துக்கொண்டு வேலைசெய்கிறார்கள் என்பது புர்¢கிறது.....

காங்கிரசின் எடுப்பார் கைப்பிள்ளை மன்மோகன் சிங் நாடு முன்னேறாமைக்குக் கூறும் காரணம்.." விவசாயத் துறை 10 ஆண்டுகளாக படுபாதளத்துக்கு போய்விட்டது. இது நாட்டு வளர்ச்சிக்கு நல்லதல்ல. வறுமை ஒழிய வேண்டுமானால் விவசாயத்துறை வளர்ச்சி அவசியம்" என்கிறார்

இவர் கூறுவதைப் பார்த்தால் ஏதோ விவசாயத்துறை தானாக வண்டி பிடித்து பாதாளத்துக்கு போனது போலவும், இவருக்கு அதுபற்றி எதுவும் தெறியாது என்பதுபோலவும் இருக்கிறது. ஒரு பிரதமர் பேசும் பேச்சா இது. விவசாயிகள் அனைவரும் தற்கொலைக்குத் தள்ளப்படும் இந்த நிலைமைக்கு யார் காரணம், என்ன காரணம், இதனை மாற்ற என்ன செய்யலாம், என்ன செய்யப் போகிறீர்கள், இதுவரை அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது, அவை ஏன் தோல்வியுற்றன, சற்று யோசித்துப் பார்த்தால் பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் பல ஆயிரம் விவசாயிகளைக் கொன்று, நாட்டின் முன்னேற்றத்தை அதல பாதாலத்திற்க்குத் தள்ளியது இதே மன்மோகன் சிங் தான் என்ற இவர்களது நிஜமுகம் நமக்குத் தெறியும்.

காங்கிரஸை விட்டால் அடுத்து RSS, BJP, ராமர் பாலம்(?), பால் குடிக்கும் பிள்ளையார் சதுர்த்தி, என நவீன விஞ்ஞானம்(!) பேசி மதவெறி ஆட்சி செய்ய இவர்கள் தயாராக இருக்கிறார்கள். இவர்கள் யோக்கியதை இவர்களது சுதேசி இயக்கத்திலேயே தெறிந்துவிட்டது, "அன்னிய பொருட்களை வாங்காதீர்கள், உள்நாட்டு சுதேசிப் பொருட்களை மட்டுமே வாங்குகள்" (அதுவும் கடைகளில் 'ஓம்' ஸ்டிக்கர் இருக்கிறதா எனப் பார்த்து வாங்குங்கள்...) என தேசப்பற்று மிக்க (!) பிரச்சாரம் செய்துகொண்டே, சத்தமின்றி தேயிலை உட்பட 120 பொருட்களை காட் ஒப்பந்தத்தின் படி வரியே இல்லாமல் இறக்குமதி செய்ய அனுமதித்து உள்ளூர் விவசாயிகளின் வயிற்றில் அடித்தார்கள். (ஒரு வேளை கிளிண்டன் கடையில் 'ஓம்' ஸ்டிக்கர் ஒட்டிருந்துச்சோ)
அனுகுண்டு வெடிப்பு, கார்கில் யுத்தம் என்று நாட்டுபற்றை(!) எல்லா இந்தியர் உடலிலும் ஸிரஞ்சு போட்டு ஏற்றிவிட்டு அவன் அந்த மயக்கத்தில் இருக்கும் போதே நம்நாட்டு வளங்களை (தண்ணீர்,மனிதவளம் உட்பட அனைத்தையும்) பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு எழுதிக் கொடுத்து விட்டார்கள்

அடுத்து கம்யூனிஸ்டுகள் எனச் சொல்லிக் கொள்ளும் CPM கட்சிகாரங்க, இவர்கள் வேலை என்னவென்றால், ஆட்சியிலிருப்பவர்கள் போடுற ஒப்பந்தம் ஏதாவது வெளிச்சத்துக்கு வந்து அரசு அம்மணமா நிற்க்கும் போது, கிருஷ்ண பரமாத்மா கணக்காக களத்தில் இறங்கி அவர்களைக் காப்பாற்றுவது தான். அட அமெரிக்கன எதிர்க்கிறேங்கிறீங்க அப்புறம் அவனுக்கு அடிவருடியான காங்கிரஸ் ஆதரிக்கிறீங்க, கேட்டா பி.ஜே.பிக் கெதிரான சக்தியா காங்கிரஸ் இருக்குங்கிறீங்க. நாட்ட விக்கிறதுல பி.ஜே.பி க்கும் காங்கிரஸிக்கும் வித்தியாசமே இல்லாதப்பே நீங்க பி.ஜே.பியை ஆதரிச்சாலும் ஒன்னுதான் காங்கிரஸ ஆதரிச்சாலும் ஒன்னுதானே. எதுக்குக் குழப்பம் அமெரிக்காவையே ஆதரிச்சுட்டுப் போங்களென். உங்களுக்குத்தான் எவ்வளவு பெரிய மனசு, இந்தோனேஷியாவில் கம்யூனிஸ்டுக்களைக் கொன்று குவித்த சுகர்த்தோவின் சலீம் கம்பெனியை ஆதரித்து, நந்திகிராமத்தில் நம் நாட்டு மக்களைக் கொன்றவர்கள்தானே நீங்கள்.

சி.பி.எம் தலைவர் பிரகாஷ் கரத் சமீபத்திய பேட்டியில் "சிறு வணிகத்தில் பெரிய நிறுவனங்களை வருவதை நிறுத்த வேண்டும் என நாஙகள் விரும்புகிறோம்" என்றார்.

லட்சக்கணக்கான சிறுவனிக மக்கள் அழிந்து வருகின்றனர், அடுத்தடுத்து இன்னும் பலர் பாதிக்க பட போகிறார்கள். இதற்கு என்ன பதில் என்றால் , பெரிய நிறுவனங்கள் வரக் கூடாது என்பதை விரும்புறோம், இது ஒரு பதிலா? மக்கள் சாகிறார்கள் என்றால், சாககூடாது என்று விரும்புகிறோம் என்கிறார்கள

சரி தேசியக்கட்சிகள்தான் இப்படி நம்ம மாநிலக் கட்சிகளில் யாராவது உண்மையாக இருக்கிறார்களா என்றால்,

முதலில் வருவது தி.மு.க குடும்பம், இதன் தலைவர் மிகப் பெரிய ராஜதந்திரி கருணாநிதி, நாட்டை விற்ப்பதில் இவரை மிஞ்ச ஆளே இல்ல. தினமும் காலை தொண்டர்களைப் பார்க்கிறாரோ இல்லையோ இரண்டு மூனு வெள்ளைக்காரர்களைப் பார்த்தே ஆகவேண்டும். இவருக்கு வெள்ளைக்காரங்க கூட போட்டோவுக்குப் போஸ் கொடுப்பதில் அப்படி ஒரு ஆசை, தினமும் இரண்டு மூனு போட்டோக்களாவது பேப்பரில் வந்துவிடனும்.
ஒரு நாள் இந்த வெள்ளைக்காரனுங்களுக்கே பயமாய் போய் தலைவரே இப்படி தினப்படிக்கு இந்த ஊரு உனக்கு அந்த ஊரு உனக்குன்னு எல்லா ஊரையும் எழுதி எழுதித் தறீங்களே உங்க நாட்டு மக்கள் ஏதாச்சும் குண்டக்க மண்டக்க செஞ்சு எங்கள ஏறக்கட்டிட மாட்டாங்களா என்று கேட்டாங்களாம். அதுக்கு நம்ம தலைவரய்யா " இது ஒரு பெரிய விஷயமே இல்ல, நாடு முன்னேறுது அதான் வெள்ளைக்காரன் வர்றான்னு சொன்னா ஜனங்க நம்பிடப் போறாங்க, அப்படியே எதிர்க்கிற மாதிரி தெரிஞ்சா, கலர் டி.வி, கக்கூஸ்ன்னு ( உங்க உலக வங்கிட்ட கடன வாங்கி) எதையாவது குடுத்து வாய அடைச்சரலாம்" என்று சொன்னாரு.

கட்சிக்கு அழகிரி, ஆட்சிக்கு ஸ்டாலின், மத்தியில் கனிமொழி என்று தனது வாரிசுகளுக்குப் பட்டம் சூட்டக் காத்திருக்கும் தமிழ்நாட்டு மகாராஜா இவர்தான். மக்களை மழுங்கடிப்பதில், முதுகில் குத்துவதில் கருணாநிதிக்கு நிகர் அவரேதான்.

அடுத்தது, என்னதான் கருணாநிதி அளவுக்கு ராஜதந்திரியா இல்லாவிட்டாலும், அமெரிக்க ஜனாதிபதியா வர அளவுக்குத் திறமையிருந்தும் ( அதுக்கு ஒரு வெங்காயமும் தேவையில்லை) தமிழ்நாட்டுக்கு சேவை செய்யவே இருப்பவர் ஜெயலலிதா. இந்தம்மா நாட்டைக் கொள்ளையடிச்ச கதையப் பத்தி பேசவே பத்து நாளாகும். இடைஇடையில் தன்னோட பார்பன புத்தியக்காட்ட " மதம்மாற்றத் தடை" , "கிடாவெட்டத் தடை", என்று தன்னிஷ்டப்படி நாட்டை ஆட்டிவைப்பது இவருடைய தனித்திறமை. எம்.ஜி.ஆரின் கருப்புப் பணத்தில் உருவான அதிமுக என்ற டிரஸ்டின் நிரந்திர காவல் தெய்வம். கருணாநிதியை விட்டால் தமிழ்நாட்டைக் காப்பாத்த (கூட்டிக் கொடுக்க) இவங்க தான் அடுத்த இடத்துல நிக்கிறது.

அடுத்து நம்ம மருத்துவர் ஐயா, இவருக்கு அடிக்கடி ஞாபக மறதி வந்துவிடும். மக்கள் பிரச்சினைகளைப் பற்றி பக்கம் பக்கமா அறிக்கை விட்டுடிவாரு. அதுக்கப்பறம் உக்கார்ந்து யோசித்தால் எல்லா பிரிச்சனைக்கும் காரணம் அவர் அங்கம் வகிக்கும் ஆட்சிதான் என்று புரிந்துவிடும். நம்ம மகன் தேர்தல்லே நிக்காமலே மத்தியமைச்சரா இருக்க உதவி செஞ்சவங்களப் பகைக்க முடியுமான்னு அமைதியாயிடுவாரு. அடிக்கடி புகையிலை, மதுவிலக்கு, ரிலையன்ஸ் என்று ஏதாவொரு பிரச்சினை அவரைத் தொடும் போது ஒரு அறிக்கை விட்டுபுட்டு தைலாபுரம் தோட்டத்துல போய் அமைதியா ரெஸ்ட் எடுத்துக்கொள்வார். தி.மு.க, அதிமுக இரண்டு கட்சிக்கும் நல்ல பிள்ளை. யார் ஆட்சிக்கு வந்தாலும் மத்தியில் இரண்டு மந்திரி பதவி. கட்சியும் வளருது இவரது சொத்து மதிப்பும் வளருது.

கடைசியாக தமிழகத்தின் அடுத்த முதல்வர், விஜயகாந்த், கறுப்பு எம்.ஜி.ஆர், கேப்டன், புரட்சிக் கலைஞர் என்றெல்லாம் ரசிகத் தொண்டர்களெல்லாம், கொண்டாடும் இவர் கட்சி ஆரம்பித்ததே கருப்புப் பணத்தை வெள்ளையாக்கவும், கல்யாண மண்டபத்தைக் காப்பாற்றவும்தான். பிந்தையதத்தான் காப்பாற்ற முடியவில்லை முந்தியதையாவது காப்பாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். உங்க கட்சிக் கொள்கை என்ன என்று கேட்டால், அது உங்களுக்கு எதற்க்கு, எனக்கு ஓட்டுபோட்டால் மற்ற எல்லோரையும் விட சிறப்பாக ஆட்சி செய்வேன், வேண்டுமென்றால் என்னை முதலமைச்சராக்குங்கள் அப்புறமாக நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள், என்று திமிராகப் பேசும் பாசிச எம்.ஜி.ஆரின் ஜெராக்ஸ் காப்பி தான் இந்த விஜயகாந்த்.

மற்றப்படிக்கு சில அரசியல் அசிங்கங்கள், ஜால்ரா கோஷ்டிகளைப் பற்றி பதிவின் நீளம் கருதி எழுத முடிய வில்லை.என்றாலும் இவர்கள் அடிக்கடி கூட்டணி மாறி திமுகவிக்கும் அதிமுகவுக்கும் 6 வித்தியாசம் கண்டுபிடிப்பது இருக்கே, மகா கேவலம்.

இவர்கள் அனைவருமே, ஒரு கும்பல் நாட்டை விற்பதால் ஏற்படும் விளைவினை வைத்து இன்னொடு கும்பல் ஆட்சியை கைப்பற்றி அதே கொள்கையினை நடைமுறைப்படுத்துவது என்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர். மக்கள் தினமும் உலகமயத்தினால், இந்து மத வெறியினால் கொலையுண்டு வருவதை தடுக்க போராடனும் என்றால், இல்லை பார்த்துக் கொண்டு நல்லவனாக இருப்பதே பெரிய காரியம் என்கின்ற நிலையினை திட்டமிட்டு உருவாக்குகின்றனர் .

இவர்களை எதிர்த்து போராடும் போது இவர்களின் நிஜமுகத்தை பார்க்கலாம். இவர்களை எதிர்க்க நாம் பயப்படுவது தான், இவர்களது மூலதனமாக உள்ளது.. அந்த பயத்தினை உதிர்க்கின்ற அந்த கணமே இந்த மக்கள் விரோத அரசு நொறுங்குவதை பார்க்க முடியும். நந்திகிராமத்தில் மக்கள் இதனை உணர்ந்து, இணைந்து போராடியதால் தான் அங்கு நில ஆக்கிரமிப்பு நிறுத்துப்பட்டு உள்ளது.

இன்று இந்த நாடு பார்ப்பனிய பயங்கரவாதத்தாலும், அரசு பயங்கரவாதத்தாலும் ஆக்கிரமிக்கப் பட்டு உள்ளது. இதனை அரசாங்கங்களை(வாட்ச் மேன்களை) மாற்றுவதால் மாற்ற முடியாது எனபது கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நாம் நேரில் பார்ப்பதில் இருந்து உணர முடியும்.

மக்களுக்கான ஒர் பொருளாதாரத்தை, கொள்கையினை உருவாக்கிட முதலில் நமக்கான ஒரு அரசை, மக்களே நேரிடையாக பங்கு கொள்ளும் ஒரு அரசை, அனைத்து அதிகாரிகளையும் மக்களே தேர்ந்தெடுத்துத் திருப்பியழைக்கும் உரிமையுடன் கூடிய அரசை ஏற்படுத்த வேண்டும்.

போராடுவதை தவிர வேறு மாற்று இல்லை என்ற நிலையினை, அனைவரும் ஒன்று சேர்ந்தாக வேண்டும் என்ற நிலையினை இந்த அரசே உருவாக்கி வருகிறது, இந்த யதார்த்ததை மக்கள் புரிந்துகொள்ளும் போது அந்த பன்னாட்டு நிறுவனங்களுடன், இந்த கார்பரேட் கட்சிகளும் நாட்டைவிட்டே ஓடவேண்டிவரும்.

Labels: , , ,

Thursday, May 17, 2007

இந்திய ஆட்சியாளர்களின் ட்ரையாஜ் கொள்கை !!

சாலை சந்திப்புகளில் நிற்கும் பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடும் வாகன ஒட்டிகள்,அதில் பயணம் செய்பவர்களுக்கு ரூ 600 அபராதம் விதிக்கப்படும் இப்படி டெல்லி போலீசார் அறிவித்து உள்ளனர். ஏன்னா வரும் 2012-ல் டெல்லில் காமன்வெல்த் போட்டி நடைபெற இருக்கிறது. காமன்வெல்த் போட்டி நடைபெறும் போது பிச்சைக்காரர்கள் இருந்தால் வருகின்ற பன்னாட்டு வீரர்கள் இந்திய நாட்டை கேவலமாக பார்ப்பார்கள் என்று பிச்சைக்காரர்களை ஒழிக்க அரசு முடிவு செய்து உள்ளது.

இதற்காக யோசிக்கும் போது இப்படி பிச்சைக்காரர்களை ஒழிக்கவே ஒரு மோட்டார் வாகன சட்டத்திருத்தம் 2002-ல் நிறைவேற்றப்பட்டு உள்ளது தற்போது தெரியவந்தது. அதன் படி சாலை சந்திப்புகளில் காத்து நிற்கும்போது பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடும் வாகன ஓட்டுனர்களுக்கும், அதில் பயணம் செய்பவர்களுக்கும் அபராதமாக ரூ 600 /- விதிக்கப்படும். இதனை தற்போது அமுலாக்க முடிவு செய்து உள்ளனர்.

-
"பிச்சை போடுபவர்கள் இருந்தால்தான் பிச்சை எடுப்பவர்கள் இருப்பார்கள் எனவே பிச்சை போடுவதை தடுக்கிறோம்" என்கிறார்கள்.இதே கண்டுபிடிப்பைக் கொண்டு தான் மும்பையில் நகரை அழகுபடுத்த போகிறோம் என்று தாரவி பகுதியில் இருந்த சேரிகளை காலிசெய்தார்கள், சென்னையில் மெரீனா கடற்கரையை அழகுபடுத்த என்று கடலோர குப்பங்களை காலிசெய்தார்கள்.
-
இன்றைக்கு இந்த பெரிய நகரங்களின் ஜொலிக்கும் கட்டிடங்களும், மாடமாளிகைகளும், கூட கோபுரங்களும் இந்த மக்களின் உழைப்பில் உருவானது. ஒவ்வொரு கட்டிடம் கட்டும்போது ஒரு தொழிலாளி உயிரிழக்கிறான்.இப்படி தங்களது உயிரையே கொடுத்துதான் பெரிய நகரங்களை உருவாக்கினார்கள்.இன்று இந்த மக்களையே அசிங்கம் என்று ஒழிக்க முடிவு செய்து குப்பைப்போல வீசியெறிய முடிவு செய்து விட்டார்கள்.
-
இவ்வாறு நாட்டின் பெரும்பான்மை மக்கள் இவர்களின் தனியார்மய, தாராளமய, உலகமய கொள்கையினால் வாழ்க்கையை இழந்து தெருக்களில் வீசியெறியப்பட்டு வருகின்றனர்.
-
இதை நேரடியாக நீங்கள் பார்க்கலாம்.சில்லரை வணிகத்தில் இன்றைக்கு ரிலையன்ஸ் உள்ளிட்ட பராசுர கம்பெனிகளை அனுமதித்து சிறு மளிகை கடைகாரர்களையும், சிறு காய்கறி கடைக்காரர்களையும் வெளியேற்றுகிறார்கள்.இதனால் சிறுகடை வைத்து இருப்பவர்கள் தள்ளுவண்டி கடைக்கு மாறி வருகின்றனர். அதேபோல தள்ளுவண்டிக்கடைக்காரர்கள் தரைக்கடைக்காரர்களாகவும், தரைக்கடைக்காரர்கள் கூலி தொழிலாளர்களாகவும் மாறி வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மை மக்கள் சொல்கிறார்கள் தாங்கள் தங்கள் உணவை இரண்டு வேலையாக குறைத்து கொண்டோம் என்று.
-
ஏற்கனவே கூலித்தொழிலாளர்கள் போன்றவர்கள் வாழவழியற்று ஒன்று தற்கொலை செய்து கொள்கின்றனர் அல்லது சிலர் பிச்சையெடுக்கின்றார்கள்.இப்படி இந்த அரசின் மூலம் பிச்சைக்காரர்களாக மாற்றப்பட்டவர்களுக்கு இன்று பிச்சைபோடுவதை தடுக்கப் போகிறார்கள். இது பிச்சைக்காரர்களை கொலைசெய்வதே ஆகும்.நேரடியாக பிச்சைக்காரர்களை கொல்ல இன்றைய சமுதாயம் ஒத்துக்கொள்ளாது என்பதால் இப்படி பிச்சை போடுபவர்களை நிறுத்தி விட்டால் தன்னாலே பிச்சைக்காரர்கள் செத்து விடுவார்கள்.
-


-
இவ்வாறு இவர்கள் எடுக்கும் நடவடிக்கை ஒரு வகையில் ட்ரையாஜ் கொள்கை போல தான் உள்ளது.அது என்ன ட்ரையாஜ் கொள்கை என்கீற்களா. ட்ரையாஜ் என்பது மெடிக்கல் எமர்ஜென்சிக்காக ஏற்படுத்தப்பட்ட வார்த்தை.அதாவது ஒரு விபத்து ஏற்பட்டவுடன் அதில் ஒரு சிலர் எப்படியும் இறந்து விடுவார்கள் எனில் அவர்களை காப்பாற்ற முயற்சி செய்வது வீண் என்று விட்டுட்டு மற்றவர்களை காப்பாற்றுவது.
-
"எப்படியும் எதிர்காலத்தில் மக்கள் பெருக்கத்தினால் சாப்பாடு, நீர் இல்லாமல் பலர் இறக்கத்தான் போகிறார்கள், அதனால் எல்லோரையும் அழைத்து செல்வதை விட அதில் பாதிப் பேரை பட்டினி போட்டே கொன்ற வேண்டியது தான்" இதுதான் அமெரிக்கா போன்ற வல்லரசுகளால் உருவாக்கப்பட்ட ட்ரையாஜ் கொள்கை.
-
இதனைதான் ஏழை, எளிய நாடுகளின் மீது இவர்கள் இன்று நடைமுறைப்படுத்துகிறார்கள்.தனக்கு கொள்ளையடிக்க அனுமதிக்காத நாடுகளின் மீதும்,
தன் முடிவுகளை ஏற்காத - ஆதரிக்காத நாடுகளின் மீது பொருளாதார தடை என்ற பெயரில் இந்த ட்ரையாஜ் கொள்கை நடைமுறைப்படுத்துகின்றனர்.
-
"நாம் உதவிகள் அளித்துக்கொண்டே இருக்கத்தான் இந்த நாடுகளின் மக்கள் குழந்தைகளை மட்டும் பெற்று கொண்டே திரிகிறார்கள்"இப்படிதான் இன்று ஆப்பிரிக்க, ஆசிய போன்ற மூன்றாம் ஏழை எளிய நாடுகள் பற்றி அமெரிக்க பிரஜைகள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
-
ஒட்டுமொத்த உலகத்திற்கும் அமெரிக்காதான் படியளப்பதாக அவர்கள் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஏழை நாடுகளின் மக்கள் உழைக்காமல் அமெரிக்காவின் பிச்சைக்காசில் உயிர் வாழ்வதாகக் கருதுகிறார்கள்.
-
"பிச்சைகாரர்களை ஒழிக்க ,பிச்சைப்போடுவதை நிறுத்தினாலே போதும்" என்று "இந்தியா போன்ற ஏழை நாட்டுப் பிரஜைகளை (பிச்சைக்காரர்களை) ஒழிக்க (பட்டினி போட்டு சாகடிக்க) அமெரிக்கா தரும் உதவிகளை நிறுத்த வேண்டும்",-இப்படி தான் சிந்தனைரிதியிலே அமெரிக்கனை மாற்றி உள்ளார்கள்.
-
ஆனால் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளின் மக்கள் இப்படி வறுமையில் இருப்பதற்கே இவர்கள் கொளுத்து திரிவது தான் காரணம். இன்றைக்கு உலக மக்கள் தொகை 600 கோடி. இதில் அமெரிக்க மக்கள் தொகை 36 கோடி. அதாவது 6%. ஆனால் இந்த 6% தான் உலக உற்பத்தியில் 40% சாப்பிடுகின்றனர். மீதம் உள்ள 564 கோடிப்பேர் அதாவது 94% பேர் 60% உற்பத்தியை சுவீகரிக்கிறார்கள்.
-
இப்படி ஒட்டுமொத்த உலகின் உழைப்பை உறிஞ்சிக் குடித்துவிட்டு, அவர்களைப் பிச்சைக்காரர்களாக பார்க்கிறான் அமெரிக்கன்.இதேபோலத்தான் இன்றைக்கு இந்தியாவில் ஒரு சிலர் 5 இலக்க, 6 இலக்க சம்பளம் வாங்க பல லட்சம் பேரைப் பிச்சைகாரர்களக மாற்றி, அவர்களை ஒழிக்கிறோம் என்று இப்போது கிளம்பியுள்ளார்கள்.
-
பிச்சைக்காரர்களை ஒழிக்க, பிச்சை போடுபவர்களுக்கு அபராதம் என்பதா தீர்வாக இருக்க முடியும். ஏற்கனவே வேலையற்றவர்களுக்கு இந்த அரசாங்கம் தான் 300,400 என பிச்சை போட்டு வருகிறது. ஆனால் உண்மையாக பிச்சைக்காரர்களை ஒழிக்க என்ன செய்ய வேண்டும், பிச்சைக்காரர்கள் உருவாகாமல் தடுக்க வேண்டும்.
-
அதற்கு இவர்கள் தங்களின் தனியார்மய, தாராளமய , உலகமய கொள்கைகளை கைவிட்டு , பன்னாட்டு & தரகு முதலாளிகளுக்கு சேவை செய்வதற்கு பதில், மக்கள் நலனில் அக்கறையுடன் செயல்பட வேண்டும். ஆனால் இதை இந்த ஆட்சியாளர்களால் செய்ய முடியுமா என்றால் முடியாது என்று தான் சொல்ல வேண்டும். ஏன்னா இந்த அமைப்பே பன்னாட்டு,தரகு முதலாளிகளுக்கு சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்டது. இதற்குள் மக்கள் நலன் என்று ஒன்றை சித்திக்க கூட முடியாது.
--
--
Related :
-
-
-
-
-
-
-

Labels: , ,