கல்வி கொடுக்க வக்கில்ல என்னடா கவுர்ன்மென்ட்டு !!
கல்வி என்பது மனிதனைப் பண்படுத்துவது என்பார்கள். ஒன்றுமே தெரியாத வெற்றுக் களிமண்ணாய் பிறக்கும் மனிதனுக்கு இந்த உலகத்தையே அறிமுகப்படுத்தி அதன் தோற்றம் முதல் இன்றைக்கு வரை நிகழந்த மாற்றங்களை, அறிவியல் கண்டுபிடிப்புகளை கலை இலக்கியங்களைப் போதித்து அவனை புடம் போட்டு வார்த்து எடுப்பதோடு, இந்த சமூகத்தில் அவன் யார்? அவனது பங்கு என்ன? என்பதை அவனுக்கு உணர்த்த வேண்டிய முக்கிய கடமை கல்விக்கிருக்கிறது.
ஆனால் இன்றைய சூழ்நிலையில் நாம் கல்வியை அப்படிப் பார்ப்பதில்லை. வேலைக்கு போய்ச் சம்பாதிக்க ஒரு தகுதியாக மட்டுமே கல்வி உள்ளது. எந்தத் தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்ட முடியும் என்று கணக்கு பார்ப்பது போல , எந்தப் படிப்பில் முதலீடுபோட்டால் பையன் அதிகமாகச் சம்பாதிப்பான் என்று கணக்குப் போடுகிறார்கள் . அவர்களைச் சொல்லி குற்றமில்லை.
இன்றைக்கு இருக்கும் நடுத்தர இளைஞர்கள் ஒவ்வொருவரும் எப்படியாவது ஒரு இஞ்சினியராக வேண்டும் என்றுதான் கனவு காண்கிறார்கள். "கனவு காணுங்கள்" என்று உற்சாகமூட்டும் முதன் குடிமகன் இருந்தபோது படித்தவர்களாயிற்றே, அவர்கள் வேறு என்ன செய்வார்கள். ஆனால் அவர்கள் கனவை நினைவாக்க அவர்களது பெற்றோர் மென்மேலும் கடன் பட வேண்டியிருப்பதை அவர்கள் உணரவில்லை. பள்ளிப்படிப்பிற்கே தங்களது சேமிப்பு முழுவதையும் கறைத்துவிட்டு , கடனாளியாக நிற்கும் நடுத்தர வர்க்கத்து பெற்றோர் கல்லூரிப் படிப்பிற்காக மகனையும் கடனாளியாக்க வேண்டியுள்ளது. நடுத்தர வர்க்கத்திற்காவது வங்கிகள் கடன் கொடுக்கின்றன. ஆனால் ஏழை எளிய மக்களுக்கு அதுவும் கிடையாது.
பொறியியல் படிப்பு படிக்கக் குறைந்தது 2 லட்சம் முதல் 8 லட்சம் வரை செலவாகிறது. 10 லட்சம் இருந்தால் யார் வேண்டுமானாலும் ஒரு டாக்டராகலாம். இப்படி லட்சங்களில்தான் இன்றைக்கு உயர்கல்வி உள்ளது. எந்தக் கல்லூரியை எடுத்துக் கொண்டாலும் அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தை விட இருமடங்கு வசூலிக்கின்றனர்.இவர்களை யாரும் தட்டிக் கேட்பதோ தண்டிப்பதோ கிடையாது.
தமிழகத்தில் மட்டும் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 4.5 லட்சம் பேர் பள்ளிப் படிப்பை முடித்து வருகின்றார்கள். இவர்களுக்கென தரமான கல்வியை வழங்க இருக்கும் அரசு கல்லூரிகள் மொத்தம் 67 (மருத்துவம், பொறியியல், கலை கல்லூரிகள் எல்லாம்) இவற்றில் வெறும் 25 ஆயிரம் பேர் மட்டுமே படிக்க இயலும். மீதமுள்ள 4.25 லட்சம் பேருக்கு கல்வி வழங்கும் பொறுப்பை அரசு தட்டிக்கழித்துவிட்டது. அதை தங்களது தலைமேல் சுமக்கப் பல கல்வித்தந்தைகள் காத்திருகின்றனர்.
ஜேப்பியார், உடையார் போன்ற சாராய முதலைகள்; தம்பித்துரை, ஏ.சி.சண்முகம் போன்ற அரசியல் பெருச்சாளிகள்; விஜயகாந்த், ரஜினி போன்ற கழிசடை கதாநாயகர்கள்; மலையாளத்து அம்மா முதல் மேல் மருவத்து அம்மா வரையிலான ஆன்மிக கொள்ளையர்கள்; இன்னும் சிலைதிருடர்கள், கள்ளநோட்டு களவாணிகள், விபச்சார புரோக்கர்கள், கடத்தல் மன்னர்கள்; முன்னாள்-இந்நாள் கட்டப்பஞ்சாயத்து ரவுடிகள் என ஒரு பெரிய தேசதுரோகக் கூட்டமே கல்வித்தந்தைப் பட்டத்தைச் சூட்டிக்கொண்டு திரிகிறது. இவர்கள் அனைவரும் கருப்புப்பணத்தைப் புரட்டுவதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர்.
இந்தக் கல்விக் கொள்ளையர்கள் அரசு நிர்ணயித்த கட்டணங்களை விட அதிகமாக வசூலிக்கும் போது, விதிமுறைகளை மீறி கல்லுரிகளை நடத்தும் போதும் , பாதிக்கப்படும் மாணவர்கள் தட்டிக்கேட்டால் அவர்களை ரவுடிகளைக் கொண்டு தாக்கும்போதும், இந்த அரசாங்கம் கண்டுகொள்வதே கிடையாது. ஏனென்றால் இன்றைக்கு ஆளும் வர்க்கமாய் உள்ள ஒவ்வொருவனுக்கும் ஒரு கல்லூரி இருக்கிறது. தமிழகத்தில் உள்ள எல்லாத் தனியார் கல்லூரிகளும் ஏதாவதொரு வடிவத்தில் இந்த ஆளும் வர்க்கத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இந்த கொள்ளையத் தடுப்பதற்கு பதில் அதனை வளரச் செய்கின்றனர்.
1950 ல் இந்தியா குடியரசு நாடு என அறிவிக்கப்பட்டபோது 10 வருடங்களில் 14 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் கல்வி கொடுபோம் என்று அறிவித்தார்கள். இன்றைக்கு 60 ஆண்டுகளுக்கு கிட்டே ஆகியும் இன்னமும் உலகின் எழுத்தறிவில்லாதவர்களில் 50 % பேர் இந்தியர்கள் என்று கூறுவது வெட்கக் கேடானது. இன்றைக்கு இந்தியாவில் 6-14 வயதுக்குக் கீழே உள்ள 20 கோடிக் குழந்தைகளில் கிட்டத்தட்ட 3 கோடிப்பேர் பள்ளிக்கு சென்றதில்லை. 6 1/2 கோடிப்பேர் 5-ம் வகுப்புடனும். 5 கோடிப்பேர் 7-ம் வகுப்புடனும் பள்ளியை விட்டு நின்றுவிடுகின்றனர்.
காங்கிரஸ், திமுக, அதிமுக, பா.ஜ.க, கம்யூனிஸ்டு ,பாமக, மதிமுக, தேமுதிக என மாற்றி மாற்றி யாருக்கு ஓட்டுப்போட்டாலும் இந்த நிலைமை மாறவில்லை, மாறாது. நம்மை விடச் சிறிய நாடான கியுபாவில் 10 ஆண்டுகளில் கல்லாமையை முற்றிலுமாக ஒழித்துவிட்டார்கள். நம்மால் முடியாதது அவர்களால் மட்டும் எப்படி முடிந்தது. அதற்குத் தேவை நாட்டுப்பற்றும்; மக்களின் மேல் உண்மையான அக்கறையும் கொண்ட ஒரு அரசு.
துப்பாக்கியை எடுத்துச் சென்று பாகிஸ்தானியரைச் சுடுவதை மட்டுமே நாட்டுப்பற்றாக போதிக்கும் இந்த அரசிடம் மக்களின் நலனை எதிர்பார்ப்பது முட்டாள்தனம், சொந்த லாபத்திற்காக நாட்டையே கூட்டிக் கொடுக்கும் அரசியல் வாதிகளிடம் நேர்மையை எதிர்பார்ப்பது மடத்தனம்.
Labels: இந்திய ஆட்சியாளர்கள், இன்றைய கல்வி, கல்விக் கொள்ளையர்கள்